இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான III வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2026 டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கு நேற்று (25) முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இணையவழியாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் மாகாண அரச சேவையின் ஆசிரியர் சேவையில் தரம் 2-I க்கு பதவி உயர்வு பெற்றதன் பின்னர் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் III வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையை நிறைவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரம் 2-I க்கு பதவி உயர்வு பெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடந்திருந்தாலும், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தரம் I க்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களும், அந்தப் பதவி உயர்வுக்குத் தேவையான III வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தேவையான சுயகற்றல் தொகுதிகளின் பாடத்திட்டம் கல்வி அமைச்சின் e-Thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பாடப்பரப்புகளை முறையாகக் கற்று, பரீட்சைக்குத் தயாராகுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




