இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால், நீண்ட வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அனைத்து இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவிக்கையில், சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது எரிபொருளை வழங்கும்போது உடனடியாக பணம் செலுத்துமாறு வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், இது வார இறுதியில் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்தப் பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், அந்தக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு கடன் வசதியை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை கடன் அட்டைகள் மூலம் நடைபெறுவதாகவும், அந்தப் பணம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதற்கு சில நாட்கள் ஆகும் எனவும் அவர் கூறினார்.
இதனால் தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு உடனடியாக பணம் செலுத்துவதில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் குமார ராஜபக்ஷ மேலும் விளக்கினார்.
QR எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து அமுலில்
இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் விலைகளில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறையை தொடர்ந்து அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலக சந்தையின் நிலைமை சீராகும் வரை பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் டீசல் நுகர்வு சுமார் 10 சதவீதமும், பெற்றோல் நுகர்வு சுமார் 5 சதவீதமும் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி தணியும் வரை QR முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




