சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாலியல் காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்பனை செய்வதும் கொள்வனவு செய்வதுமான இணையவழி மோசடி நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Facebook உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை (Groups) உருவாக்கி இந்த இணையவழி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்பில் அமைச்சு முழுமையான கவனம் செலுத்தியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அவை இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறான ஆபத்துகளுக்கு உள்ளாகும் நிலை காணப்படுவதால், பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைக்கு பலியாகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது தெரியவந்தால், அவர்களை உடனடியாக உளவியல் மற்றும் சமூக ஆலோசனை சேவைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.




