சூரியன் தோற்றத்தில் தெற்கு நோக்கி நகரும் நிலையில், இன்று (28) முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மைய அட்சரேகைப் பகுதிகளுக்கு நேரடியாக மேலே சூரியன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




