வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் “சிசுசெரிய” (Sisu Seriya) சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பேருந்துகள் மட்டுமே பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்படாமல் மற்றும் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் இவ்வாறான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சு. விமலேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது கட்டாயமாகும்.
எனினும், சில பேருந்துகள் உரிய அனுமதி அல்லது பதிவு இல்லாமல், “சிசுசெரிய” சேவையின் கீழ் பதிவு செய்யப்படாமல் தொடர்ந்து பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாமல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் பாடசாலை போக்குவரத்து சேவையில் தொடர்ந்து ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.




