தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் விளைச்சலில் ஓரளவு குறைவு ஏற்படும். எனினும், இம்முறை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக தேங்காய் பூக்கள் பூப்பது குறைவடைதல், பூக்கள் காய்ந்து போதல் மற்றும் தேங்காய்கள் உதிர்தல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். இதன் விளைவாக அடுத்த ஆண்டு தேங்காய் விளைச்சல் குறையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, வறட்சியைத் தாங்கக்கூடிய வகையில் தேங்காய் தோட்டங்களில் நீரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய நீர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் காலங்களில் புதிய தேங்காய் பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராசிரியர் அஜித் ஜயவீர தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக புதிதாக பயிரிடப்படும் தேங்காய் மரங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், 2026ஆம் ஆண்டில் சுமார் 3,018 மில்லியன் தேங்காய்கள் வருடாந்த உற்பத்தியாகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது 2025ஆம் ஆண்டில் கிடைத்த 2,800 மில்லியன் தேங்காய் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 சதவீத அதிகரிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




