புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு, நீரில் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆசிய பிராந்திய நாடுகளில் எல் நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டபோதே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கும் எனவும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக, சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலநிலை தொடர்பான அபாயங்களுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கமும் இணையும் நிலையில், இலங்கையின் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அபாயங்கள் இன்னும் பரந்தளவிலான தாக்கமாக மாறாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முக்கியமான வாய்ப்பு இன்னும் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.




