எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
தெரண 360 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கினால் குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், தற்போது ஏற்கனவே இருந்த மட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினால் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரித்தால், அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி, எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை எதிர்கொள்ளும் சுற்றுலாத்துறைக்கும் தாங்க முடியாத சுமையாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் கிடைத்த மழைவீழ்ச்சியின் காரணமாக ஓரளவு நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்ததுடன், பகல் நேரங்களில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரக் கட்டமைப்பை நிலைப்படுத்தவும் முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது நிலக்கரி தொடர்பான நட்டத்தில் சுமார் 10 சதவீதம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் புதிதாக நிலக்கரி கப்பல்கள் வந்து, அவற்றில் கொண்டுவரப்படும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வரை இந்த நட்டத்திலிருந்து விடுபட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்பட்டுள்ள அந்த நட்டத்தை வரி மூலமாகவோ அல்லது மின்சார நுகர்வோரிடமிருந்தோ அறவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக மேலும் தெரிவித்துள்ளார்.




