Homeஉள்நாட்டு செய்திபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது!

spot_img

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் திடீரென மோதல் நிலைமை ஏற்பட்டால் விரைவாகப் பதிலளிப்பதற்கும், கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான கலந்துரையாடலில் மஹர சிறைச்சாலை வளாகத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் பாரிய பிரச்சினையாக இருந்ததாகவும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரிகள் இரவு 10 மணி வரையிலும் பணியாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,081 அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்கு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், வேறு எந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் கைப்பற்றப்படாத போதைப்பொருட்கள் கூட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைப்பற்றப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்ல எனவும், சிலர் ஒரு சந்தர்ப்பத்தில் செய்த தவறின் காரணமாக சிறையில் இருப்பதால் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்களின்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வலுவான பொறிமுறை அவசியம் என்பதால், தற்போது 15 சிறைச்சாலைகளில் இவ்வாறான ஒருங்கிணைந்த பொறிமுறைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையொன்றில் பிரச்சினைக்குரிய சம்பவம் ஏற்படுவதற்கு முன்னரே அதனை அடையாளம் கண்டு தீர்வு வழங்குதல், அவசர நிலைமையின்போது பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைப்பைப் பேணி விரைவான பதிலளிப்பை வழங்குதல் மற்றும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தல் ஆகியவை இந்தப் பொறிமுறையின் பிரதான நோக்கங்களாகும்.

இதற்கிடையில், அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது கைதிகளால் தீவைத்து அழிக்கப்பட்ட பிரதான சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகம், புனர்வாழ்வு பிரிவு, நெசவுப் பிரிவு மற்றும் ‘விவிங்’ பிரிவு உள்ளிட்ட இடங்களையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

விளக்கமறியல் கைதிகளை சந்தித்த சந்தர்ப்பத்தில், கடந்த மாதத்தில் மஹர சிறைச்சாலைக்கு தொடர்புடைய 500 அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடாமல், சமூகத்திற்கு பயனுள்ள நபர்களாக செயற்படுமாறு அமைச்சர் கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என வலியுறுத்திய அமைச்சர், கைதிகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய தொழிலாளர் சக்தியாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

QR முறை தொடரும்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது...

எல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின்...

பாரிய முறைகேட்டை மூடிமறைக்க ஜனாதிபதி செயலாளர் முயற்சி

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேட்டை மூடிமறைக்க தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி....

More like this

QR முறை தொடரும்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது...

எல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின்...