முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரனை எவ்வாறாயினும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, அவர் தற்போது வசிக்கும் நாடுகளின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனைத்து குற்றவாளிகளையும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நாம் கேட்டவுடன் அனைத்து நாடுகளும் குற்றவாளிகளை எம்மிடம் ஒப்படைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம்.
இதற்காக பாரிய இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்ட அமைப்புகளுக்கு அமைவாக, அர்ஜுன மகேந்திரனை எப்படியாவது இலங்கைக்கு அழைத்துவந்து, அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.”
இதற்கிடையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளதாகவும், அதற்கமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.




