2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் இல்லாத பொய்யான கூற்றுகள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தவறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு வீழ்ச்சியடையாது எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவிக்கையில்,
“எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நாம் பெருமளவு பணத்தை செலவிடுகிறோம். இதற்கான தீர்வாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தினோம். எமது அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடையாமல் பாதுகாத்தோம்.
இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2028ஆம் ஆண்டில் கடனை செலுத்த முடியாமல் நாடு வீழ்ச்சியடையும் என கூறுகிறார். இது எந்தவித அடிப்படையும் இல்லாத அப்பட்டமான பொய்.
எதிர்வரும் ஐந்து வருட காலத்தை எடுத்துக்கொண்டால், கடந்த வருடமே ஒரே வருடத்தில் நாம் செலுத்த வேண்டியிருந்த அதிகூடிய கடன் தொகை காணப்பட்டது. அது 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதனை நாம் செலுத்திவிட்டோம்.
இந்த வருடம் 3.7 பில்லியன் டொலர்களும், அடுத்த வருடம் 2.5 பில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டியுள்ளது.
2028ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் டொலர்களும், 2030ஆம் ஆண்டில் 3.5 பில்லியன் டொலர்களும், 2031ஆம் ஆண்டில் 3.4 பில்லியன் டொலர்களும், 2032ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் டொலர்களும் செலுத்த வேண்டியுள்ளது.
செலுத்த வேண்டிய மிகப்பெரிய தொகையை கடந்த வருடமே செலுத்தியுள்ள நிலையில், தற்போது நாட்டின் வருமானமும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்கால கடன் தொகைகளை எங்களால் செலுத்த முடியாமல் போவது எப்படி?
தவறான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.”
வத்தேகம பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்.




