வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும், நாய்களைப் பதிவு செய்வதற்கும் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இதன்படி, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து நாய்களுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி, பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.
மேலும், 6 வாரங்களுக்கும் அதிக வயதுடைய நாயின் உரிமையாளர் அல்லது அந்த நாயை தமது பொறுப்பில் வைத்திருக்கும் நபர், அதற்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி, ஆண்டுதோறும் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி நாயை பதிவு செய்ய வேண்டும். இதன்போது நாய்க்கான பதிவு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
நாய்களைப் பதிவு செய்யத் தவறும் உரிமையாளர்களிடம், பதிவு கட்டணத்துக்கு மேலதிகமாக ரூ.2,000 அபராதம் அறவிடவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனமும் தமது நிர்வாக எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் கருத்தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாய் இனப்பெருக்க நிலையங்களை நடத்துவதற்கு கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லாத நபர்கள் நாய்க்குட்டிகளை விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாது என புதிய சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.




