web log free
June 27, 2025
kumar

kumar

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டதை அடுத்து வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து அவர் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பன தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதனால் ஜனாதிபதியோ பிரதமரோ அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை ஜனாதிபதிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி அந்த வீட்டில் இருந்து அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்தது. 2022ல் தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி செய்தார். இன்று அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருகிறார் என்று போராட்டக்காரர்கள் ஒப்பிடுகிறார்கள்.

கறுப்பு ஜுலை - வரலாறு என்ன?

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயல்பாடாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்?

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாகக் கூறப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு - பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வந்துவிட்டதாக புரளி பரவி, சிறிய அளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இலங்கையில் தமது சொத்துகளை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதன்முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர். 

இன்று என்ன நடக்கின்றது?

இலங்கையில் தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் எனத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது ரணில் விக்ரமசிங்கவை நோக்கி நகர்ந்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியாக கடந்த 21ஆம் தேதி பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 22ஆம் தேதி அதிகாலை காலி முகத்திடலுக்கு ராணுவத்தை அனுப்பி போராட்டக்காரர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

போராட்டக்காரர்கள் வசமிருந்த ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது

இவ்வாறு காலி முகத்திடலுக்குள் புகுந்த ராணுவம், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும் அப்புறப்படுத்தியது.

இந்த சம்பவத்திற்குப் பலரும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்தார்.

''ஜுலை மாதம் 23ஆம் தேதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் தேதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார்.

மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம். 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார். இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்" என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார்.

"1983ம் ஆண்டு நடந்த கறுப்பு ஜுலை நிகழ்வை மீண்டும் நிகழ்த்த ரணிலுக்கு தேவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது" என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் பிரதீபா பெர்ணான்டோ தெரிவித்தார். ''1983 கறுப்பு ஜுலை நினைவலைகளை நாம் அறிவோம். இந்த கறுப்பு ஜுலை காரணமாக, இன்றும் காயங்களுடன் வாழும், பலரை நாம் அறிவோம். பலரது வாழ்க்கை அந்த தருணம் முதல் முழுமையாக மாறியது. அந்த ஜுலை மாதத்தை மீண்டும் நிகழ்த்துவதற்கு ரணிலுக்கு தேவை உள்ளதா என தெரியவில்லை. நேற்று இரவு நேரத்தில் கொடுமையான தாக்குதலை நடத்தியமையானது, கறுப்பு ஜுலைக்கு சமமானது என நான் நினைக்கின்றேன். அந்த கறுப்பு ஜுலையின் மாதிரியா இது என்ற எண்ணம் எனக்கு வருகின்றது" என போராட்டகளத்தில் முன்னின்று போராடும் பிரதீபா பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

பல சிங்கள இளைஞர்களிடம் இந்தக் கருத்து எதிரொலிக்கிறது. 

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவையொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் றிசாத் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைத்து பேசுவார் என அறியப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது. 

ரயில் கட்டண திருத்தம் இன்று (23) முதல் அமுல்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய ரயில் கட்டண திருத்தத்தின்படி, 10 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச ரயில் கட்டணம் 20 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், முதல் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேடை டிக்கெட் கட்டணமும் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டாலும், பேருந்துக் கட்டணத்தை ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் இன்னும் குறைவாகவே உள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி அவரை நியமித்து அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது.

அரகலய எதிர்ப்பாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


“விஹார மகாதேவி பூங்காவை எதிர்ப்பாளர்களுக்கு வழங்குவதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார். இப்போது அமைதியான இடமாற்றத்தைத் தொடங்குவதற்கும் அவரைத் தடுத்தது எது? என்று கேள்வி எழுப்பினார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரகலய மக்கள் வீட்டுக்கு அனுப்பியதன் பின்னர், விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்திற்கு வந்த தேசியப் பட்டியல் இடத்தை மீண்டும் சமகி ஜன பலவேகய (SJB) விடம் ஒப்படைக்க வேண்டும், இதனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று பரிந்துரைத்துள்ளார்.

 

பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முறைப்படுத்தி ஒரு வாரத்திற்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன

கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மகிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்ரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர

சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd