198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான்.
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார்.
2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
தலைமன்னார், பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1.240 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, குறித்த வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன், 24 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஐஸ் போதைப் பொருள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும்.
நாளை (14) காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளவென எதிர்வரும் 30ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மார்ச் 30 ஆம் திகதி கொழும்பு வரும் பிரதமர் மோடி, பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மார்ச் 31 ம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி அங்கு ஈழத் தமிழர்களை சந்தித்து இந்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் கூறியதாவது:-
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல்.
அதுபோன்று ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதலுக்கு இலக்குகள் என்பதே மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். ரஷியாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து பேர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கூட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் பரப்பப்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் குழுவை சந்தித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அவரை வரவேற்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நிதியமைச்சர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன், இதன் போது விஜயம் தொடர்பான ஆரம்ப உடன்பாடுகள் எட்டப்பட்டன.
மக்கள் விரைவில் பயிர்ச் செய்கை யுத்தத்தை ஆரம்பிக்காவிடின் நிலைமை மிகவும் மோசமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அவதியுறுவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் நாடு சோகத்தை நெருங்கி வருவதாகவும் வாழ்க்கைச் செலவை தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்குத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.