web log free
April 20, 2024

பெலாரஸ் - லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் ஒக்டோபர் 5ஆம் திகதி லித்துவேனிய நாட்டின் எல்லையிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள புதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்கள் என்பனவற்றின் மூலம் குறித்த நபர் 29 வயதான இலங்கைப் பிரஜை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அவரது மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இதில் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன் இந்த சம்பவத்தில் அதிகளவில் பெண்களும் சிறுவர்களுமே உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் வீதிகளில் வைத்து கைபேசிகளின் வெளிச்சத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த செய்திச் சேவை மேலும் தெரிவித்தது.

சுமார் 100 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் பாரிய கட்டடங்கள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும் மக்கள் வீடுகளை இழந்து செய்வதறியாது உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.