ஆன்லைன் நிதி மோசடிகளுக்கு இலக்காகாமல் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய வங்கியின் “Scam Proof” (மோசடியை முறியடிப்போம்) என்ற விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மோசடி செய்பவர்கள் பயத்தையும் அவசர உணர்வையும் பயன்படுத்தி மக்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உடனே செயல்படுங்கள்! உங்கள் வங்கிக் கணக்கு ஒரு மணி நேரத்தில் முடக்கப்படும்” போன்ற அவசரமான செய்திகள் மூலம், சிந்திக்க நேரமளிக்காமல் உடனடி முடிவுகளை எடுக்க மக்களைத் தூண்டுவது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் பொதுவான யுக்தி என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குறிப்பாக வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் எதிர்பாராத குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் கிடைத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிதி நுகர்வோரை விழிப்புணர்வூட்டுவதும், இணையவழி மற்றும் சைபர் நிதி மோசடிகளின் அபாயத்தை குறைப்பதும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




