குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், அரசியல் தளத்தில் உள்ள செல்வாக்கு மிக்க “காட்ஃபாதர்கள்” மீது வழக்குகள் தொடரப்படுவதும் நடைபெறும்போது, அவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து வருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இலங்கையில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை கடந்த ஒரு ஆண்டாக தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவிலான குற்றவாளிகள் இதில் சிக்கியுள்ளனர். முன்னாள் நீதியமைச்சர்கள் கூட, அவர்களின் மகன்களும் பாரிய அளவிலான பாதாள உலக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களாக தற்போது வெளிப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டாக மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படும்போதும், அரசியல் தளத்தில் உள்ள அந்த ‘காட்ஃபாதர்கள்’ மீது வழக்குகள் தொடரப்படும்போதும், அவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் காண்கிறோம்.
இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இனவாதிகள், திருடர்கள், மோசடிக்காரர்கள், கொள்ளையர்கள் என யாராக இருந்தாலும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.




