விவசாயியே தெய்வம் என்றும், விவசாயிகளை நாட்டின் ஆட்சியாளர்களாக உயர்த்துவோம் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று விவசாயிகளை அவமதித்து, அவர்கள் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் என முத்திரை குத்தி இழிவுபடுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை நம்பிக்கையிழந்த நிலைக்கு தள்ளிய அரசு, தற்போது அவர்களை “செயற்கை விவசாயிகள்” என்றும், நாட்டிற்கு உணவு வழங்குபவர்கள் அல்ல என்றும் அவதூறாக சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளை ஆட்சியாளர்களாக மாற்றுவோம் என்று கூறியவர்கள், இன்று அவர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு இழிவுபடுத்தும் நிலைக்கு தாழ்ந்துவிட்டதாகவும், விவசாயிகளின் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்த அரசே தற்போது அவர்களை அவமதித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
அரசின் கணக்குப்படி ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ.137 செலவாகும் நிலையில், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.120 என்ற நிர்ணய விலையே வழங்கப்படுகிறது.
இதனால், இந்த அரசுக்கு இலட்சக்கணக்கான வாக்குகளை வழங்கிய விவசாயிகள் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூ.17 இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.




