மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலைகளையும் திருத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 85 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 80 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இதற்கு முன்னரும் இலங்கை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதே நிலைமை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதால், அது மக்கள் விரும்பாத தீர்மானமாக இருந்தாலும், உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சீரமைப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மேலும் சவாலாக அமையக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



