அரசியல் நோக்கங்களின் பின்னால் செல்லாமல், அரசாங்கத்துடன் கலந்துரையாடி நெல் கொள்வனவு விலை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு விவசாய மக்களிடம் தாம் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுப்பதாக அரலியா அரிசி நிறுவனத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இது இப்போது நாட்டின் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நீங்கள் எங்களிடம் செய்திகளை கேட்கிறீர்கள், நாங்களும் ஏதாவது கூறுகிறோம், விவசாயிகளும் ஏதாவது சொல்கிறார்கள், அரசியல்வாதிகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள். ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
நாட்டில் நெல் உபரி இருப்பு உள்ளது. ஆனால் சந்தைக்குத் தேவையான நெல் வகைகளே இல்லை. தேவையான உற்பத்திகள் திட்டமிட்ட முறையில் சந்தைக்கு வந்திருந்தால் இந்த உபரி எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தியிருக்காது. தற்போது தொடர்ந்து இரண்டு போகங்களாக நாட்டில் பெரும்பாலும் ‘நாடு’ வகை நெல் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. இதற்கும் சில விசேட காரணங்கள் உள்ளன. குறிப்பாக, கீரிசம்பா போன்ற நெல் வகைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை போதுமானதாக இல்லை. அதனால் விவசாயிகள் பெரும்பாலும் நாடு வகை நெல்லையே பயிரிடத் தொடங்கியிருக்கலாம்.
எனவே, விவசாயிகள் அரசியல் பின்னணிகளின் தாக்கத்திற்கு ஆளாகாமல், ஆட்சியாளர்களுடனும் அரசாங்கத்துடனும் நேரடியாக கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என நான் மிகவும் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். யாருடைய அரசியல் கருவியாகவும் நீங்கள் மாறக்கூடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.”




