2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 50 டிகிரிக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் வடமாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (17) அதிகாலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தின் மீது பாரிய பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (17) அதிகாலை இரவு அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளை நிலையத்தை கடந்து தியத்தலாவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, மலை உச்சியில் இருந்த பெரிய பாறாங்கல் ஒன்று 156/13 மைல் தூணுக்கு அருகில் திடீரென இரவு தபால் புகையிரதத்தின் மீது விழுந்துள்ளது.
ரயிலின் முன் எஞ்சின் ரயில் தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விழுந்த பாறைகளில் ரயில் சிக்கிக் கொண்டதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ரயில் பாதை மற்றும் இன்ஜினுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு இன்ஜின்களுடன் இயங்கும் கொழும்பு பதுளை இரவு அஞ்சல் புகையிரதத்தின் முன்பக்க இயந்திரம் பாறைகளில் சிக்கியதையடுத்து, அதனுடன் பொருத்தப்பட்டிருந்த பின்பக்க இன்ஜின் இரவு அஞ்சல் ரயிலின் அனைத்து பெட்டிகளையும் மீண்டும் ஹப்புத்தளை நிலையத்திற்கு செலுத்தி தற்போது இரவு அஞ்சல் புகையிரதம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு பஸ்கள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக இந்நாட்டின் அரசியலில் ஈடுபட்டு வரும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கட்சிகளின் ஆதரவுடனும் தற்போது நாடாளுமன்ற சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு செயற்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக தனது கட்சியின் ஆதரவைப் பெறுவது குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
பல சர்வதேச உறவுகளைக் கொண்ட இந்த அரசியல் தலைவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு இப்போதே தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இதில் முழுமையாக கலந்து கொண்டு அரசியல் சபை அமைப்பது தொடர்பிலான விடயங்கள் மேற்கண்ட கலந்துரையாடலில் தெரியவந்துள்ளன.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளின் 20% பங்குகளை விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வங்கிகளில் 20% பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தேசிய குற்றமாகும் எனவும் இதன் மூலம் வங்கிகளை முழுமையாக விற்பனை செய்யக் கூட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக இவ்வாறு வங்கிப் பங்குகளை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும், அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, இரண்டு முக்கிய அரச வங்கிகள் இலாபம் ஈட்டி, கருவூலத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அந்த அறிவிப்பு மேலும் கூறுகிறது.
கோப் குழுவின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாகவும் கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகனுமான கனிஷ்க பண்டார கோப் குழு கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவரை கோப் குழு கூட்டங்களில் பங்கேற்க வைப்பது நாடாளுமன்ற விதிகளை கடுமையாக மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கோப் குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
https://youtu.be/gKhxoUpdhaI
முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயாரின் திருமணமாகாத கணவனால் இந்த சிறுமி கர்ப்பமாக்கப்பட்டதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து முல்லைத்தீவில் வைத்தியரை சந்தித்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
பின்னர் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமிக்கு சுகவீனம் ஏற்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுமி நடந்த அனைத்தையும் வைத்தியரிடம் தெரிவித்தார்.
இது குறித்து வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, கருக்கலைப்பு செய்த வைத்தியர், சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி தொடர்ந்தும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்தோம். அதற்காக எங்களுக்கு சிறந்த புத்திஜீவிகள் சபையுடன் , திறமையான சட்டத்தரணிகளும் இருந்தனர். நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கிறது.
மக்களின் நம்பகத்தன்மை என்ற கொள்கைகளை கோட்டாபய ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நிவாட் கப்ரால், டபிள்யூ.டீ. லக்ஷ்மன், பீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகல மற்றும் நாணயச்சபை மீறியுள்ளதாக தீர்ப்பளித்திருக்கின்றனர்.
நாட்டை வங்குரோத்து அடையச்செய்தது யார் என்பது தொடர்பாக கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில் இந்த பொருளாதார வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் தெளிவாக பெயர் குறிப்பிட்டு அறிவித்துள்ளது.
எனவே நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்து பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தருப்பவர்களே இந்த நிலைக்கு காரணம். எனவே நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று விசேட கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், குறித்த தீர்மானம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும், பொறுப்பான அமைச்சர்களை எச்சரித்து இதனைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனவே, இறுதி முடிவை பட்ஜெட் குழு வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை மேலும் 3 நாட்களுக்கு கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு நேற்று (14) தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் 24, 27, 28 ஆகிய திகதிகளில் கிரிக்கெட் நிறுவனங்களின் அதிகாரிகளை கோப் குழு முன்பு அழைக்க முடிவு செய்யப்பட்டது.
அங்கு, 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை மற்றும் 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை ஆகியவற்றில் விசாரிக்கப்படும்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண தனது மாமியார், மைத்துனர் உள்ளிட்ட நண்பர்கள் குழுவை அழைத்துச் சென்றதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா நேற்று கோப் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் மற்றும் நிறுவனத்தின் பரிந்துரைகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை தொடர்பில் கலந்துரையாட கோப் குழு, கிரிக்கெட் நிறுவனத்தை அழைத்திருந்தது.
கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக தனது மனைவிக்கு விசா கிடைக்கவில்லை என்றும் அதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்ததாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏனைய குழுவினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
அங்கு தயாசிறி ஜயசேகர எம்.பி, தான் எடுத்தவர்களை அறிவிக்குமாறு தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.
“ரொபர்ட் சில்வா எனது மைத்துனர், டெய்சி ஜீனெட், எனது மனைவியின் தாய். ஸ்ரீமால் குணரத்ன எனது நண்பர். நிஷாதி பத்மசிறி அவரது மனைவி, சஞ்சய் சமரசிங்க எனது நண்பர். ஆர். ஷெனுலா தினுசிகா மற்றும் சாரா தினாலி ஆகியோர் அமைச்சரின் மகள்களாவர். கடிதத்தை இருவரிடமும் கொடுத்தேன். அமைச்சருக்கும் கடிதம் கொடுத்தேன். ஆனால் அப்போது அரசியல்வாதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் விசா வழங்கப்படவில்லை. சுதத் ரோஹன சந்திரேஸ்கரவின் பெயருக்காக காத்திருக்கிறேன்..."
உலகக் கிண்ணப் போட்டிகளைக் காணச் சென்ற அனுராதா எதிரிசிங்க மற்றும் ஷலனி தாரக ஆகிய இரு நடிகைகளின் பெயர்கள் உப தலைவர் ஜயந்த தர்மதாசவினால் சேர்க்கப்பட்டதாக அங்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.