இலங்கை கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதற்கு எல் நினோ நிலைமையே காரணம் என முடிவு செய்வதற்கு இதுவரை போதுமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான நாரா தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை உலகளாவிய ரீதியிலும் அவதானிக்கப்படும் ஒரு போக்கின் பகுதியாக இருக்கக்கூடும் என நாரா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக மூன்று முக்கிய விஞ்ஞான அணுகுமுறைகளின் கீழ் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை மீனவர்கள் தெரிவிக்கும் மீன்பிடி வளங்கள் மற்றும் மீன் பிடிப்பு குறைவுக்கான காரணிகளை அடையாளம் காணும் வகையில் விஞ்ஞான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு கடற்றொழில் அமைச்சு நாரா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கடல் சூழலியல் நிலைமைகள், மீன்களின் உயிரியல் மற்றும் நடத்தை முறைகள், சமூக–கலாசார காரணிகள் ஆகிய மூன்று முக்கிய அணுகுமுறைகளின் கீழ் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மீன் வளம் குறைவதற்கும் எல் நினோ நிலைமைக்கும் நேரடித் தொடர்பு இருப்பது இதுவரை விஞ்ஞானத் தரவுகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அவ்வாறான முடிவுக்கு வருவது தற்போது அவசரமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல் நீரில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் முதன்மை உற்பத்தித்திறன் குறைவதால், மீன்களுக்குத் தேவையான உணவுச் சங்கிலியில் தாக்கம் ஏற்படக்கூடும் என ஆரம்பகட்ட அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய மாற்றங்கள் காரணமாக மீன்களின் பரவல், இடம்பெயர்வு, உணவு தேடும் முறைகள் மற்றும் மீன்பிடி அளவு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, உலகின் சில பகுதிகளில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான மீன்பிடி நடவடிக்கைகளும் மீன் வளம் குறைவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி அறிக்கையைத் தயாரிக்க அதிக காலம் தேவைப்படும் நிலையில், இன்னும் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவைக்கேற்ப, அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட தொடர்புடைய தீர்மானம் எடுக்கும் நிறுவனங்களுக்கும் விஞ்ஞானத் தகவல்கள் வழங்கப்படும் எனவும் நாரா குறிப்பிட்டுள்ளது.
ஆய்வுகள் நிறைவடைந்து, மீன் வளம் குறைவதற்கான காரணிகள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீன் வள முகாமைத்துவம், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான தேவையான பரிந்துரைகளை முன்வைக்க நாரா நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.




