நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பல சொத்துகளுக்கும், கைதிகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பல ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது 600க்கும் மேற்பட்ட கைதிகள் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும், சில கைதிகள் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், அண்மையில் குருவிட்ட, பள்ளன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை நேற்று (10) கிடைக்கவிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.




