அரச சேவையில் புதிதாக 72,000 பணியாளர்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் உரிய தகுதிகளின் அடிப்படையில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாததன் காரணமாக, அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான நிர்வாகக் கட்டமைப்பாக விளங்கும் அரச சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என தெரிவித்த அவர், அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அரச சேவையில் சுமார் 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி, உரிய பொறிமுறையின் ஊடாக அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நலின் ஹேவகே உறுதியளித்தார்.
அரசாங்கம் முறைகேடுகள் தொடர்பான விடயங்களில் மட்டுமே தலையிடும் என தெரிவித்த அவர், அரச ஊழியர்கள் அவர்களின் திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையாக பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




