தங்களுக்கு வாக்களித்த விவசாய மக்களை மறந்து, சர்வதேச நாணய நிதியத்தை (IMF) திருப்திப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளுக்கு நாள் வாழ்க்கையை நடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நெல் விவசாயிகள் தங்களது நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை கோருகின்றனர். தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக வயல்களில் இறங்கி, நெல் அறுவடை செய்துகொண்டே ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை வழங்கப்படும் என்று கூறினார்கள்.
ஆனால் தற்போது, ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபாய் செலவாகிறது என்றாலும், அரசாங்கம் ஒரு கிலோவுக்கு 120 ரூபாய் மட்டுமே வழங்குகிறது என்று கூறுகின்றனர்.
அதாவது, ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு 137 ரூபாய் எனக் கூறிவிட்டு, அரசாங்கம் 120 ரூபாய் மட்டுமே வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்துகிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட இந்த அரசாங்கமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அரசாங்கமும் திட்டமிட்டு விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்துகிறது.
விவசாயிகள் தற்போதைய ஜனாதிபதி ‘தம்புத்தேகம விவசாயியின் மகன்’ என்ற நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் தம்புத்தேகம விவசாயியின் மகன் என அழைக்கப்படும் தற்போதைய ஜனாதிபதி, ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபாய் நட்டத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும்போது, அது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நீதியா? நியாயமா?
ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு 137 ரூபாய் என்று கூறுவது யார்? விவசாயத்துறை அமைச்சர். அவர் அதை எங்கே கூறினார்? நாடாளுமன்றத்தில்தான்,” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று விவசாயிகளிடம் தரமான விதை நெல் போதுமான அளவில் இல்லை என்றும், உரத்திற்கான பணம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உரத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகவும், உரத்தின் தரமும் குறைந்துள்ளதாகவும், விவசாய இரசாயனப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாய உபகரணங்களுக்கு VAT வரி விதிக்கப்படுவதால் அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
“IMF-ஐ மகிழ்விப்பதற்காக அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு VAT வரியை விதிக்கிறது. தேர்தலின்போது IMF-க்கு எதிரான விவசாய மக்களின் உயிர்நாடி தாங்கள்தான் என்று கூறி வாக்குகளைப் பெறவில்லையா?
ஆனால் இப்போது கோடிக்கணக்கான வாக்குகளை வழங்கிய விவசாயிகளை மறந்து, தற்போதைய அரசாங்கம் IMF-ன் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து செயற்படும் அரசாங்கமாக மாறியுள்ளது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை ருவன்வெல்ல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.




