இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதாகவும், சில நிலையங்களில் QR குறியீடு பரிசோதிக்கப்படுவதில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“அவசர நிலைமை அல்லது மிகவும் விசேடமான சூழ்நிலை தவிர, கடந்த ஆறு மாத காலப்பகுதியில் வழங்கப்பட்ட எரிபொருள் அளவு போதுமானதாகவே இருந்துள்ளது.
எனக்கு நினைவிருக்கிறது, எரிபொருள் விலை இதைவிட அதிகமாக இருந்த காலத்திலும் QR குறியீடு நடைமுறையில் இருந்தது. அப்போது எமது எரிபொருள் நுகர்வு 50 சதவீதத்தால் குறையவில்லை.
பெட்ரோல் நுகர்வு 9 சதவீதம் மட்டுமே குறைந்திருந்தது. டீசல் நுகர்வு 18 சதவீதம் குறைந்திருந்தது. அதனால் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள்.
ஆனால், நாம் இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டை பேண வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் டொலர் அளவை ஒருவிதத்தில் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
இல்லையெனில் டொலரின் விலை 550 அல்லது 600 ரூபாய் வரை செல்ல ஆரம்பித்தால், அது பொருளாதாரத்திற்கு பிரச்சினையாக மாறும். எனவே, அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
QR முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. எங்காவது அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தால், அது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கும்.
பொதுவாகப் பார்க்கும்போது, முந்தைய காலத்தைவிட தற்போதைய நிலையில் QR குறியீடு அதிகமாக பரிசோதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அவ்வாறு பரிசோதிக்கப்படுவதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.”




