தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமே தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது.
நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் இவர். அவர் இன்றைக்கு இப்படி சொல்லுவார், நாளை வேறொன்றை சொல்லுவார், அவற்றை எல்லாம் முக்கிய விடயமாக எடுத்து கொள்ள கூடாது என தெரிவித்தார்.
விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது.
தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி என்ஐஏவுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் உள்ள வங்கி கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கி கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கி கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கி கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களை தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்கு சென்ற போது இலங்கை பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தகவலை பெற என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கலைகட்டியுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் களத்தில் இறங்கி கலக்கி வருகின்றனர். அதில் குஷ்பு, உதயநிதி, கமல், சீமான் போன்றவர்கள் முன்னிலை பெறுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தமது அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கினார்.
ஒரு பகுதியில் விஜய் பிரச்சார இடத்தில் வடை சுடுவதையும் வேட்பாளர் போஸ்டருடன் நிற்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சூழலை உருவாக்கவே தனது வீடு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம மறுத்துள்ளார்.
தமக்கு நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது குடும்பத்தினரும் ஏற்கனவே கனடாவிற்குள் நுழைவதற்கான விசாவைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் பின்னணியில் அவர் இருப்பதாக யாராவது சந்தேகம் இருந்தால், விசாரணைக் குழு தேவையான விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதற்கு ஆதரவாக தான் மற்றும் தனது மனைவியின் கைரேகைகள் மற்றும் மொபைல் போன் தரவுகள் விசாரணைக் குழுவிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால் பிரதமருக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என அவர் கூறினார்.
இதற்கிடையில், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிகா விக்கிரமசிங்கவுக்கும் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் எம்.பி. மூன்று தடுப்பூசிகளையும் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றார்.
சுஹாசினி மணிரத்னம் இவர் சுஹாசினி என்ற பெயரில் அறியப்படுபவர், தமிழ்த் திரையுலகில் இவர் ஒரு நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக பணியாற்றியுள்ளார். அவர் 1980, நெஞ்சத்தை கிள்ளாதே. தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிந்து பைரவி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், கடுமையான கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 60 சதவீதம் குறைவாக உள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 20 குழந்தை மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்கள் வரையிலான 379 குழந்தையிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது”.
இது குறித்து ஆராய்ச்சியாளர் டெல்மேன் கூறும்போது.
‘தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் கொரோனாவால் அனுமதிக்கப்படுவது 61 சதவீதம் குறைவாக இருந்தது.கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பிறந்தவர்கள். தடுப்பூசி போடாத தாய்க்கு பிறந்த ஒரு குழந்தை இறந்தது.
இளம் குழந்தைகளை பாதுகாக்க தாய் வழி தடுப்பூசி மிகவும் முக்கியமான வழியாகும். தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக கர்ப்ப காலத்தில் எந்த நிலையிலும் தடுப்பூசி போடுவது முக்கியம்” என அவர் கூறினார்.
மரபணு சோதனை அறிக்கைகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதியளவு இரசாயனங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
மரபணு பரிசோதனைகளை நடாத்துவதற்காக மாதாந்தம் சுமார் 200 அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயன வகைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவை எனவும் இவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன வகைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலையினால் வழக்கு விசாரணை அறிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது என அரசாங்க இரசாயன பகுப்பாய்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
''இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவை காண சொக்கநாதபுரத்தில் உள்ள அவரது பண்ணைக்கு செந்தில் தொண்டமான் சென்றிருந்தார்.
அவரை நாகபட்டினம் அக்கரைபட்டி சண்முகம், ராமேஸ்வரம் தேவதாஸ் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர்.
அக்கரைபட்டி மீனவர்களின் 3 விசைப்படகை இலங்கை அரசு கைப்பற்றியது. இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரையும், 56 விசைப்படகுகளையும் மீட்பதோடு கைதான ராமேஸ்வரம் வேர்கோடு மீனவர் ராஜகுரு 48, பாஸ்கரனையும் 37, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் செந்தில் தொண்டமான் கூறியதாவது:
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்தியா, இலங்கை பிரதமர்கள் மற்றும் இலங்கை யாழ்ப்பாண மீனவ அமைப்பும், தமிழக மீனவ அமைப்பும் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணலாம். மீனவர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்கு மத்திய, மாநில அரசு முயற்சித்து வருகிறது , என்றார்.
இன்றைய நாள் எப்படி
வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022
மாசி 5
மாசி மகம்.
நல்ல நேரம் பகல்: 10:30AM - 11:30AM
மாலை: 5:00PM - 6:00PM
இராகுகாலம் பகல்: 1:30PM - 3:00PM
இரவு: 10:30PM - 12:00AM
குளிகை பகல் 9:00AM 10:30AM
இரவு 1:30AM 3:00AM
எமகண்டம் காலை: 6:00AM - 7:30AM
இரவு: 10:30PM - 12:00AM
திதி பிரதமை, இரவு 11:08PM
நட்சத்திரம் மகம், மாலை 4:37PM
சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்.
பரிகாரம் - தைலம்
சூலம் - தெற்கு
ராசி பலன் வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022
மேஷம்
குழந்தைகளால் தொல்லை உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களைக் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்குத் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது.
ரிஷபம்
வழக்குகளை இன்று தள்ளிப் போடுவது நல்லது. மதிப்பு மிக்க பொருட்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். அன்னையின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
மிதுனம்
தொழில் தொடர்பான தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். உடன்பிறப்புக்களின் உதவி மனத் தெம்பைத் தரும்.
கன்னி
அதிக குடும்பச் செலவுகள் காரணமாகக் கையிருப்புக் குறையும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகமை பாராட்டாது இருப்பது நல்லது.
மகரம்
வீட்டில் ஒற்றுமை இன்மையால் ஒருவிதக் குழப்பம் நிலவும். இஷ்டத்துக்கு மாறாகவே எல்லாம் நடக்கும். சிலருக்குக் கோர்ட் படி ஏறவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கடகம்
உறவுகளிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிருங்கள்.
சிம்மம்
பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்.
துலாம்
பலவழிகளிலும் இலாபம் பெருகும். சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். வியாபாரிகளுக்குத் தொழில் விருத்தி ஏற்படும்.
மீனம்
பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பர். பிரிந்திருந்த உறவுகள் பேரன்பால் ஒன்று சேரும். எல்லாவகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
தனுசு
புனித யாத்திரைகளை மன மகிழ்ச்சியுடன் சென்று வருவீர்கள். .பலவழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்
தனலாபம் பெருகும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர பரிசுத் திட்டங்களை அறிவிப்பர்.
கும்பம்
தம்பதிகளின் ஒற்றுமையால், குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வால் வாகனயோகம் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.