வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொது வீதிகளில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்கு விசேட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் அத்தகைய வாகனங்களின் இலக்கத் தகடுகள் அல்லது காணொலி ஆதாரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலைப் பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனைத் தடுக்கும் நோக்கில், தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மோட்டார் வாகன ஆணையாளருக்கு, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, டபிள்யூ.பி.ஜே. சேனதீர மேலும் தெரிவித்தார்.தற்போது பல வாகன உரிமையாளர்கள் வெவ்வேறு வண்ணங்கள், எழுத்துருக்கள் (Fonts) மற்றும் இலச்சினைகள் அடங்கிய அலங்கார இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படுவோரைக் கண்டறியவும் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் வருகிற 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கல்விக்காலம் ஜூலை 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் ஒன்பது நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையின்போதிலும் நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி தொடரும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக எரிபொருள் விலையில் ஒரு அளவு உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
ஆனால், முழுமையான விலை உயர்வு செய்யப்படமாட்டாது என்றும், அதில் குறிப்பிடத்தக்க பகுதியை அரசுக் கோஷ்டி (Treasury) ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள் விலைகள், போர் நிலைமை சீரடைந்த பின்னர் முடிந்தவரை விரைவில் குறைக்கப்படும் என்பது அரசின் எதிர்பார்ப்பாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் 14ம் திகதி பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார். அவரைக்காப்பாற்ற அவருடைய நான்கு மகன்களும் ஆற்றின் ஆழத்திற்குள் சென்றிருந்த வேளையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அவ்வாறு காணாமல் போனவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தபோதே புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தோடு ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த வேளையே இச்சம்பவம் நடைபெற்றது.
குறித்த காணாமல் போனவர்களை காப்பாற்ற கடற்படையிடம் உதவி கேட்டும் "முதலைகள் இருப்பதாகக் கூறி கடற்படையினர் ஆற்றில் இறங்க மறுத்துத் திரும்பிச் சென்றுவிட்டனர்" என்று அங்கிருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து காணாமல் போன மூன்று சகோதரர்களில், இருவரின் உடல்களைப் பின்னர் பிரதேசவாசிகளே கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் நேற்று ஏப்ரல் 14 மாலை நிகழ்ந்துள்ளது, சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரதேசமே சோக மயமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கால் மார்க்ஸின் "மூலதனம்" கொள்கைகளுக்கு முரணாக, "சமூக மூலதனம்" மூலம் பெரும் சொத்து சேர்த்துள்ளாரா அமைச்சர் லால் காந்த?
அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கு அமைய, விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனது சொத்து விபரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, அமைச்சரின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி 460 மில்லியனுக்கும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி,
அமைச்சருக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களில் 56 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட குடியிருப்பு கட்டடமும் 14 பேர்ச் நிலமும் முக்கியமானவை.
இதற்கு மேலதிகமாக, நன்கொடை உறுதிப்பத்திரங்கள் மூலம் கிடைத்த 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,500 சதுர அடி குடியிருப்பு கட்டடம் மற்றும் 10 பேர்ச் நிலமும்,
2.5 மில்லியன் (25 இலட்சம்) ரூபாய் பெறுமதியான நிரந்தரக் கட்டடம் மற்றும் 20 பேர்ச் நிலமும் அவருக்குச் சொந்தமாக உள்ளன.
மேலும்,
வாரிசுரிமை மூலம் தனக்குக் கிடைத்த 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடம் மற்றும் வணிகக் கட்டிடம் ஒன்றையும் தனது அசையாச் சொத்துக்களாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்துக்களின் கீழ்,
45 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம்,
16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும்
3 மில்லியன் (30 இலட்சம்) ரூபாய் பெறுமதியான ஒரு தங்கக் காசு ஆகியவற்றை அமைச்சர் கொண்டுள்ளார்.
இந்தச் சொத்து விபர அறிக்கையில் உள்ள மிக விசேடமான விடயம் என்னவென்றால்,
10 தனியார் நிறுவனங்கள் சார்ந்து அவர் மேற்கொண்டுள்ள முப்பத்தெட்டு கோடியே முப்பத்தொன்பது இலட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று ஐந்து ரூபாய் நாற்பது சத (ரூ. 383,906,705.40) பெறுமதியான பிணையங்கள் முதலீடாகும்.
அமைச்சரின் வருடாந்த வருமான ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, சம்பளம் மூலம் 7,38,918 ரூபாயும்,
சொத்துக்களை வாடகைக்கு விடுவதன் மூலம் 4,00,000 ரூபாயும்,
ஓய்வூதியமாக 7,71,400 ரூபாயும் வருமானம் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் நிலையான வைப்புக்கள் (Fixed Deposits) மூலம் வருடாந்தம் 27,55,851 ரூபாய் வருமானம் ஈட்டுவதோடு, தனது தற்போதைய தொழில் மூலம் வருடாந்தம் 18,00,000 ரூபாய் வருமானத்தைப் பெறுவதாகவும் அந்தச் சொத்து விபர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளவில் விமான எரிபொருள் பற்றாக்குறை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
உலக எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% நடைபெறும் முக்கிய வழியாக உள்ள ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பிய ஆணையம் தற்போதைக்கு எரிபொருள் முழுமையாக முடிந்துவிடவில்லை என்றாலும், விரைவில் வழங்கல் பிரச்சனைகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. International Energy Agency (IEA) மற்றும் Rystad Energy ஆகியவை மே அல்லது ஜூன் மாதத்திலிருந்து விமான ரத்தாகத் தொடங்கக்கூடும் என கணித்துள்ளன.
ஐரோப்பா போதுமான அளவு மாற்று எரிபொருள் பெற முடியாவிட்டால், ஜூன் மாதத்தில் கையிருப்பு மிகவும் குறைந்த நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.
இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா, குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு விழா காலத்தையொட்டி அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 163 மில்லியனை மீறும் வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மொத்தம் 434,338 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக சாலை அபிவிருத்தி ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதில், ஏப்ரல் 12 ஆம் திகதி மட்டும் ரூபாய் 45 மில்லியனை மீறும் வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் அவசர நிலைக்கு உள்ளானால், 1969 அவசர அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு சாலை அபிவிருத்தி ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது்.
அதேநேரம் சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.