ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவுக்கு சலுகை பெற்றுத்தருவதாகக் கூறி இலஞ்சமாக பெறப்பட்ட ரூ.1,200 இலட்சம் (ரூ.12 கோடி) பணத்தில், சரித் அபேசிங்க மற்றும் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் மற்றும் சொத்துகள் வாங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் அனூஷா சம்பந்தப்பெரும தெரிவித்ததாவது:
“இந்தச் சம்பவம் தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார். மேலும் ஹர்பி என்ற நபர் சத்தியப்பிரமாண வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள நதுன் சிந்தக (ஹரக் கட்டா) மற்றும் மிதிகம ருவன் ஆகியோரிடமிருந்தும் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பணத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மூன்றாவது சந்தேகநபரே உண்டியல் முறையில் அந்தப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் வாங்கியதும், வீடுகள் கட்டியதும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.”
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் கும்பல்களுடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பு அண்மைய கைது நடவடிக்கைகள்மூலம் அம்பலமாகி வருவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோரை விடுவிக்க பல மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த காலங்களில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க அரசு வழிமுறைகளே தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தகைய சம்பவங்களை அப்படியே மறக்கடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் தங்கள் செயல்களுக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்பதை அரசு உறுதிசெய்யும் என்றும் அமைச்சர் விஜெபால உறுதிகூறினார்.
தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சொந்த வீடின்றித் தவிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில், கொலன்னாவ பகுதியில் பிரம்மாண்டமான 12 மாடி வீடமைப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பிரமாண்டமான நிதியுதவியுடன் சுமார் 5,784 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் மொத்தம் 624 வீடமைப்பு அலகுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
அத்துடன், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த வீடமைப்புத் திட்டப் பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிறைவடைந்த பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.
தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கருகே இன்று (27) அதிகாலை 12.45 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுவரை அரசாங்கம் எரிபொருளுக்காக 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, மீண்டும் அந்த மானியத்தை வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையினால், அதற்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் சற்று அதிகரிக்க நேரிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்த உயர்ந்த எரிபொருள் விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவை என்பதால், எதிர்காலத்தில் முன்பதிவு செய்யப்படும் எரிபொருளுக்காக அதன் செலவை ஈடுசெய்து, அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் "மாட்டியா" எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதான குறித்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்திரண்டாம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து 'பஸ்பொட்டா' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், அத்துடன் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு டுபாயில் வைத்து சந்தேகநபரின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 50 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.
பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்படும் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின், இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2009-ல் உள்நாட்டு போர் நடந்தபோது விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதம் மற்றும் இதர தளவாடங்களை வாங்க தங்கத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
உள்நாட்டு யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் சேகரித்து வைத்திருந்த சுமார் 6 ஆயிரம் கிலோ தங்கம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்தத் தங்கம் எங்கே என்ற விவரம் தெரியவில்லை.
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை 3 மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மக்களிடமிருந்து தங்க நகைகள் எதையும் கைப்பற்றவில்லை. புலிகளின் களஞ்சியச் சாலைகளில் இருந்து 150 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.
அதேசமயம், அந்த நகைகளின் உரிமையாளர் விவரம் தொடர்பாக எவ்விதத் தகவல்களும் கிடையாது. முன்னதாக 2014-ல் அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திய 2,015 தமிழர்களுக்கு அவர்களது நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.