தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (07) பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார்.
பின்னர் ஏனைய கட்சி தலைவர்கள் எம்பிக்கள் கைச்சாதிட்டனர்.
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதில் வென்னப்புவ பகுதியை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வென்னப்புவ, தம்பரவில பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நால்வர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விநியோகித்த 70 வயதான பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளம் மூலம் இணைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 25, முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைகள், 2026 பெப்ரவரி 17 - 26 வரை நடத்தப்படவுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு (1/3) அளவுக்கு குறைக்கும் இலக்கை அரசு உறுதியுடன் முன்னெடுத்து வருவதாக மின்சாரம் மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2024 ஆம் ஆண்டில் ஒரு மின்சார அலகின் சராசரி செலவு ரூபாய் 37 ஆக இருந்த நிலையில், தற்போது அதனை ரூபாய் 29 ஆகக் குறைக்க அரசு வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசின் அடுத்த இலக்கு ஒரு மின்சார அலகின் செலவை ரூபாய் 25 ஆகக் குறைப்பதே என தெரிவித்தார். அந்த இலக்கை அடைய முடிந்தால், மொத்த மின்சார கட்டணத்தை சுமார் 32 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஜூலை மாதத்தில் ஒரு மின்சார அலகின் செலவு ரூபாய் 37 ஆக இருந்த காலப்பகுதியில், மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி (NPP) வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்காக எதிர்பார்க்கப்படும் ரூபாய் 13,094 மில்லியன் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் நோக்கில், மின்சார கட்டணத்தை 11.57 சதவீதம் உயர்த்த இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிவு செய்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
மேலும், உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு வழங்க முடியாது என்றும், நாட்டிற்குள் விநியோகிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த அடிப்படை உண்மைகள் குறித்த சாதாரண அறிவு கூட இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதாகவும் குமார ஜயகொடி விமர்சனம் செய்தார்.
2026 ஆம் ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு ரூ.2,206 பில்லியன் வருவாய் இலக்கை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த இலக்கு 2025 ஆம் ஆண்டில் பெற்ற உண்மையான வருவாயைவிட குறைவானதாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான பிரதான காரணமாக வாகன இறக்குமதி குறைவடையும் நிலை காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தையில் தற்போது வாகனங்கள் போதியளவில் இருப்பதால், 2025 ஐ ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வாகன இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் குறையும் என சுங்கத் துறை ஊடக பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதற்கிடையில், 2025 டிசம்பர் 30 ஆம் திகதிவரை சுங்கத் துறை மொத்தமாக ரூ.2,540.3 பில்லியன் வருவாயை சேகரித்துள்ளது. இது முன்னர் இருந்த அதிகபட்ச ரூ.1,500 பில்லியன் வருவாய் சாதனையை முறியடித்ததாக பதிவாகியுள்ளது.
ஆனால், டிட்வா சூறாவளி தாக்கம் காரணமாக டிசம்பர் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் இறக்குமதி நடவடிக்கைகள் மந்தமாக இருந்தன. இருப்பினும், நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்குத் தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவாக, மாத இறுதியில் வருவாய் மீண்டும் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, டிசம்பர் 30 ஆம் நாளில் மட்டும் சுங்கத் துறை ரூ.20 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவிப்பின்படி, கடந்த இரண்டு வாரங்களுக்குள் சந்தையில் ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் 100 ரூபாவால் உயர்ந்துள்ளது.
அமைப்பின் தலைவர் அசேல சம்பத் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இதற்கு இணையாக காய்கறி எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் திடீர் சூறாவளி போன்ற வானிலை நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அமைப்புச் சட்டத்திற்கிணங்க இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது.
ஒட்டோ டீசல் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.279 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.323 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.340 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.182 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது .
பெட்ரோல் ஒக்டேன் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலைகளை திருத்துவதாக LIOC நிறுவனமும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனக்கும் தனது மகனுக்கும் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக ஒரு குடும்பத்தை இலக்காகக் கொண்ட அரசியல் பழிவாங்கல் என்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போலீசின் உத்தரவின் பேரில் இன்று (05) காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜரான சந்தர்ப்பத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அழைப்பை புறக்கணித்தால் கைது செய்வதற்காக நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என போலீசார் எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை ஏன் அழைத்தனர் என்பது குறித்து எவ்வித காரணமும் அறிவிக்கப்படவில்லை என்றும், FCID தமக்கு புதிதான இடமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
“இது எனக்கு புதிய இடமல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல். ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வழக்கில் என் பிள்ளைகளை முதலில் கைது செய்து, பின்னர் என்னையும் கைது செய்யும் திட்டம் இது. அரசாங்கம் இதற்காக இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அவதூறு செய்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பிள்ளைகளும் எந்த தவறும் செய்யவில்லை. எனவே இதை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம்,”
என்று அவர் கூறினார்.
மேலும், இந்த விடயத்தில் தாம் அச்சமடையவில்லை என்றும், நீதியும் நியாயமும் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சதொச (SATHOSA) நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி வாகனத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும், மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குடன் தொடர்புடையதாக, சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளரான இந்திக ரத்னமல்ல என்பவர் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பதவியில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இருந்த காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் லாரி ஒன்றை ஒரு எத்தனால் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோவுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திக ரத்னமல்ல வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், வரும் ஜனவரி 09ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய ஐந்து விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதும், அவர் இருந்த இடத்தை கண்டறிய போலீசாரால் முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.