மர்மமான முறையில் மரணமடைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான மரணப் பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே இது தற்கொலை என மருத்துவக் குழு முடிவெடுத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனக் கூறியிருந்த நிலையில், மருத்துவக் குழுவினர் ஏதேனும் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும், கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவை தானா என்பது உறுதிப்படுத்தப்படாமல் அவசர அவசரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.
அத்துடன், இந்த மரணப் பரிசோதனையை மேற்கொண்ட குழுவில் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் நண்பர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, தற்போதைய அறிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்த செய்திகள் தொடர்பில் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர விளக்கமளித்துள்ளார்.
பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வரிக் கொள்கையை எளிமைப்படுத்தும் நோக்கில், இதுவரை காலமும் அறவிடப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, இதுவரை காலமும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட்ட 18% பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஆகியன எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடன் (VAT) இணைக்கப்பட்டு 20.5% சதவீதமாக அறவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அந்த மாதத்திலிருந்து சமூக பாதுகாப்பு வரி அறவிடப்பட மாட்டாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இனிவரும் காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரி என இரண்டு வகை வரிகள் தனித்தனியாக அறவிடப்படமாட்டாது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த வழக்குத் தாக்கல் தொடர்பான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை பொதுவாக அறியப்பட்ட தகவல்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மே தினம் நிகழ்வில் இதுகுறித்து கருத்து வெளியிட்டதாகவும், அதன்படி வரவிருக்கும் நாட்களில் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் இலங்கை முழுவதும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,082 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, ரத்னபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும், குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் ப்ரஷிலா சமரவீரா தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்கள் 12 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், அது டெங்குவா என்பதை உறுதி செய்ய உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவரின் ஆலோசனை பெறும் வரை காய்ச்சலுக்கு Paracetamol தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும், கொசு கடியிலிருந்து பாதுகாப்பதற்காக கொசு விரட்டிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“ஹேக்கர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 2.5 மில்லியன் டாலர், மத்திய வங்கியில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை மட்டுமே என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
இந்தச் செயல் அரசியல் அதிகாரத்தின் செயல் அல்ல.
ஒரு பாடசாலையை அதிபர் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்பறையில் நிகழும் ஒரு சம்பவத்திற்கு கல்வி அமைச்சரை நேரடியாகத் தொடர்புபடுத்துவது போன்ற உதாரணம் இது.
இது மத்திய வங்கியில் தொழில்நுட்ப நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்த ஒரு சம்பவம்.
இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிந்தவுடனேயே, அதில் தலையிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு விசாரணை செயல்முறையைத் தொடங்கியது.
ஜனாதிபதி அனுர திசாநாயக்க மத்திய வங்கிக்கு வந்து பணியாற்றவில்லை. செயலாளரிடமிருந்தே தலையீடு இருந்தது. பின்னர் இது அதிகாரிகளால் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்று தற்போது தெரிகிறது.
நிதிச் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும், அரசியலிலும் அனுபம்கொண்டு எங்களுடன் பணியாற்றியவர். அவரது அறிவை நாங்கள் அறிவோம். அவர் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி நம்பினார்.
இரண்டரை மில்லியன் டாலர்கள் இழப்பு செயலாளரின் திறமையின்மையால் ஏற்பட்டது என்று யாராவது குற்றம் சாட்டினால், நான் அதையும் நிராகரிக்கிறேன். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பணமும் காணாமல் போனது. தற்போது அது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இவை எதுவும் ஒரு அரசியல் செயற்பாட்டின் விளைவு அல்ல. நாங்கள் எங்கள் கைகளைக் கழுவிக்கொள்வதற்காகவும் இதைக் கூறவில்லை” என்பதாக அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கியிருந்தது.
இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (03) பகல் நேரங்களில் Heat Index (மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம்) “கவனம் செலுத்த வேண்டிய” அளவில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக,
ஆகியவை உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், தொடர்ந்து இப்படியான சூழலில் செயல்படுவதால்,
ஏற்பட்டு, அதன் விளைவாக தசை இறுக்கம் (Muscle cramps) உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு ஆலோசனை:
அதிக வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெரிய அளவிலான மோசடி வழக்கில் குற்றச்சாட்டு எதிர்நோக்கும் ஒரு ராஜபக்ச குடும்ப உறுப்பினர், உடல்நிலை காரணங்களை கூறி நீதிமன்றத்தை தவிர்த்து வருவதாகவும், தேவையானால் சர்வதேச பிடிவிராந்து பிறப்பித்து கைது செய்யப்படும் எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த மே மாதத்திற்குள் சுமார் 15 குற்றவியல் வழக்குகளுக்கு தீர்ப்புகள் வர இருக்கின்றன. அதனால் குற்றம் செய்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர். திருட்டு செய்தவர்களுக்குத்தான் அதன் அளவு தெரியும். அதனால் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக பேசுகின்றனர்.
ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவுடன் உருவான இந்த அரசாங்கம், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவினாலும் மக்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்த குற்றமும் காலப்போக்கில் மறைந்து போக அனுமதிக்கப்படாது. அடுத்த சில மாதங்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் காலமாக இருக்கும்.
ஊழல் மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் முக்கியமான தீர்ப்புகள் வெளியாக உள்ளன. அது முன்னாள் ஜனாதிபதியா, அவரது உறவினர்களா என்பது எங்களுக்கு பொருட்டல்ல. ஏற்கனவே ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பெரிய மோசடி வழக்கில் உள்ள ஒருவரோ, ‘கழுத்து முறிந்தது, முதுகெலும்பு பாதிக்கப்பட்டது’ எனக் கூறி நீதிமன்றத்தை தவிர்க்கிறார். தேவையானால் Red Notice பிறப்பித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.
சிலர் நீதிமன்றங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அவர்கள் விரும்பினால் நடத்தட்டும். ஆனால் நாங்கள் சட்டப்படி செயல்படுவோம். எப்போது வேண்டுமானாலும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கத் தயாராக உள்ளனர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
இலங்கையில் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட புதிய விலைகளின் முழு விபரம்:
பெற்றோல் 92 ஒக்டேன்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபா ஆகும்.
பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபா ஆகும்.
ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 392.00 ரூபா ஆகும்.
சூப்பர் டீசல் (4 ஸ்டார்): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபா ஆகும்.
மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபா ஆகும்.
எரிபொருள் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் தொடர்பில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்குப் பின்னர் சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
92 ஒக்டேன் ரக பெற்றோல் – ரூ. 398
95 ஒக்டேன் ரக பெற்றோல் – ரூ. 455
1 லீற்றர் ஒட்டோ டீசல் ரூ. 382
1 லீற்றர் சுப்பர் டீசல் ரூ. 443 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் 1 லீற்றர் மண்ணெண்ணெய் ரூ. 255 இற்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.