பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைக்கப்படும் நிலையில், இலங்கையில் அது உயர்த்தப்படுகிறது. அரசாங்கத்திற்கு பொருளாதார மேலாண்மை குறித்து எந்தத் திறந்த விவாதமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இலங்கையில் பலவீனமான ஆட்சி நிலவினால், வெளிநாடுகள் அதனை மிகவும் விரும்பும். இந்த நாட்டையும் உக்ரைன் சென்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், சதித்திட்டமிட்ட ‘அரகலய’ (போராட்ட) காலத்தில் சிலர் செயல்பட்டனர்.
உக்ரைன் தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டு, அண்டை நாடான ராஷ்யாவுடன் நல்லுறவை பேணி வந்தது. ஆனால் பின்னர் ஒரு போராட்டம் உருவாக்கப்பட்டு, ஒரு நடிகர் ஜனாதிபதியாக்கப்பட்டார்; அதன் மூலம் ரஷ்யாவுடன் மோதல் உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அதற்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் அந்த நடிகர் ஜனாதிபதியை அழுத்தத்திற்கு உட்படுத்தி, உக்ரைன் மக்களுக்கு சொந்தமான சுமார் 500 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனிம வளங்களை கைப்பற்றியது.”
இந்தக் கருத்துகள் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டன.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவர் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகவோ, மின்சார விநியோகம் துண்டிக்கப்படவோ, விவசாய உரங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படவோ எந்தவிதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலைமை மற்றும் இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணயச் சவால்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டின் இறக்குமதி செலவு 2 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் டொலர் கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அல்லது உரத் தட்டுப்பாடு போன்ற நிலைமைகள் உருவானால், அது நாட்டின் முழுமையான நிலைத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க அரசு உறுதியுடன் செயல்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தை விலைகள் தொடர்ந்து அதிகரித்தாலும், அத்தியாவசிய பொருட்கள் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் தொடர்ச்சியாக மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் மேலும் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நாட்டின் நலன் கருதி செயற்படத்தக்க ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
'எனக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்த எண்ணமும் இல்லை. எந்த அரசியல் மேடையிலும் ஏறிச் செயல்படத் திட்டமில்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டால், அதை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
என்னுடன் போராடிய மற்றும் போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படைவீரர்களின் நலனே எனது முதன்மை நோக்கமாகும். நாம் போராடியது எந்த இனத்திற்கும் எதிராக அல்ல பயங்கரவாதத்திற்கே எதிராக இருப்பினும் இன்று வரை சில மேற்கத்திய நாடுகள் எங்களை அநியாயமான முறையில் நடத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் அணியையும், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, சுரேஷ் சலே ஒரு அரசியல் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 300 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும் மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது சுரேஷ் சலே தொடர்பான தகவல்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷ அணியினர் பதற்றமடைந்து வருவதாகவும், அவரிடமிருந்து தகவல்கள் வெளியாகும் போதெல்லாம் நாமல் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றுவதாகவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் அவர் கூறியதாவது:
“கைது செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த பிறகு, சுரேஷ் சலே தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், வாழ்வது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறுகிறார். இது மிகவும் நகைச்சுவையான நிலைமை என்று நாங்கள் நினைக்கிறோம்.
2022 ஆம் ஆண்டின் மக்கள் போராட்டத்திற்குப் பிறகு எங்களை கைது செய்தார்கள். பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எங்களை சிறையில் அடைத்தார்கள்.
அப்போது ரணில் தலைமையிலான ஆட்சி, அதற்கு ஆதரவளித்த அதிகாரிகள் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்டோர் எங்களை இருண்ட அறைகளில் அடைத்தனர். சுவாசிக்க முடியாத, காற்றே வராத இடங்களில் வியர்வையில் வாட விட்டனர்.
போதுமான உணவோ, குடிநீரோ வழங்கப்படவில்லை. தூங்க ஒரு பாயோ, துணியோ கூட தரப்படவில்லை. எங்களை அழிக்கத் திட்டமிட்டவர்கள் இன்று பிணை கேட்டு புலம்புகின்றனர்.”
மேலும் அவர் கூறியதாவது:
“2019 ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 300 பேரையும், காயமடைந்த 500 பேரையும் மறக்கச் செய்து, இன்று பிணை பெற முயற்சிக்கின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, தற்கொலை எண்ணம் வருகிறது என்று கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ அணியையும், கோட்டாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக சுரேஷ் சலே ஒரு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
எனவே இந்த விசாரணைகள் தொடர வேண்டும். சுரேஷ் சலேயிடம் இருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியவுடன், ராஜபக்ஷ அணியினர் கலங்கத் தொடங்கியுள்ளனர். சலே குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் ராஜபக்ஷ தரப்பு பதற்றமடைகிறது? அவரிடமிருந்து தகவல்கள் வெளிவரும்போது ஏன் நாமல் ராஜபக்ஷ குரல் கொடுக்கிறார்? இதற்கான தொடர்புகள் படிப்படியாக வெளிச்சத்துக்கு வருகிறது.”
2029 ஆம் ஆண்டில் தானும் இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதற்கான தகுதிகள் தமக்குள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவை எடுக்க வேண்டியது மக்கள்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எப்படியாயினும் தாம் அந்தப் பதவிக்கு வந்தால், IMF உடன்படிக்கையிலிருந்து விலகி, BRICS அமைப்பில் உறுப்பினராக இணைந்து ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்ததாக நாட்டை வழிநடத்த வர வேண்டியது ரணில் பின்பற்றிய பாதையில் செல்லும் தலைவரல்ல; மாற்று அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் நாட்டைச் சீர்செய்ததாக தாம் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட இந்த அரசு எவ்வளவு பெருமையாகப் பேசியாலும், மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் இந்த நாட்டைச் சீர்திருத்தியதாக நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்தப் பணியைச் செய்த நாளில்தான் இந்த அரசு மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றியது என்று நாம் ஏற்றுக்கொள்வோம். இதுவே யதார்த்தம். இதுவே உண்மை.
எங்களிடம் அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேச அஞ்சுவதில்லை. 24 மணி நேரத்திற்குள் கைது செய்யலாம். மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை மரண தண்டனையே.”
இந்தக் கருத்துகளை சரத் பொன்சேகா ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது...
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குருவத்தோட்டா - படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்குருவத்தோட்டா, படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீயினால் மையம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தீ விபத்து நடந்த நேரத்தில் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தனியாரால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக அங்கிருந்த ஒரு குழுவினர் தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை (04) நீதித்துறை விசாரணை நடத்தப்பட்ட பின்னர், சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.