கொழும்பு பொது அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வமாக சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், அபராதமின்றி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30) முடிவடைகிறது என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறுகின்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அறிவிப்புகளும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவிலான சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது,
இதனிடையே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொது அதிகாரிகள் மற்றும் ஆண்டுதோறும் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய பிரிவினருக்கு இக்கட்டளை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே இலங்கை ஆசியாவின் வலிமையான நாடாக முன்னேற முடியும் என்றும், தற்போது அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் ஐக்கியதேசியகட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி, உலுவிட்டிகே பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
“ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். அவர் உடல்நலம் பெறும் வரை ஜி. எல். பீரிஸ் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இலங்கைக்கு நல்ல எதிர்காலம் தேவை. தற்போதைய அரசியலமைப்பின் வரம்பிற்குள் நாம் செல்லக்கூடிய அளவு சென்றுவிட்டோம். இதற்கு அப்பால் ஆசியாவின் வலிமையான நாடாக மாற வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவும் மற்ற அனைத்து கட்சித் தலைவர்களும் தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க, நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மக்கள் அப்படியே செய்துவிட்டனர். இப்போது ஒரு கொசுவைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
இப்போது முழு நாட்டிற்கும் ‘அஸ்வெசும’ போன்ற நிவாரணம் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தபோது, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டு விலையும் உயரவும், குறைந்தால் குறையவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை.
IMF உடன் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த திட்டங்கள் தற்போது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தொடங்கிய திட்டத்தின்படி, 2025 டிசம்பர் 31 வரை அவர் ஆட்சியில் இருந்திருந்தால் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார். இந்த ஆண்டின் இறுதிவரை ஆட்சியில் தொடர்ந்திருந்தால் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கையும் நிறைவேற்றியிருப்பார். அதற்காகவே பொருளாதார அபிவிருத்தி சட்டத்தை அவர் கொண்டு வந்தார். சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.”
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாரிய அந்நியச் செலாவணி மோசடி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துவதுடன், அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகளை அரசின் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவான (COPF) முன் ஆஜர்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
COPF தலைவர் நோக்கி அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த நிதி மோசடி நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே அதிரவைக்கும் அளவுக்கு மிகக் கடுமையான சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் இந்த மோசடி, பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் மோசடி வலையமைப்பின் ஊடாக நடைபெற்றதாக ஜனாதிபதி முன்னதாக வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், ஆனந்த விஜேபால உறுதிப்படுத்திய தகவலின்படி, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 105 போலி நிறுவனங்கள் ஊடாக சட்டவிரோதமான 953 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.12.89 பில்லியன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி குற்றச்செயல் தொடர்பில் மத்திய வங்கியின் பங்கை ரவி கருணாநாயக்க கடுமையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார். 13 வர்த்தக வங்கிகளில் உள்ள 227 கணக்குகள் ஊடாக 26,108 மோசடி டெலிகிராபிக் பணப்பரிமாற்றங்கள் (TT) மூலம் இவ்வளவு பெரிய தொகை இரண்டு ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேறியபோதும், மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் துறையும் நிதி புலனாய்வு பிரிவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அமைப்புசார் தோல்வி குறித்து விளக்கம் பெற, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் மூத்த அதிகாரிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம், சுங்கத் துறை பணிப்பாளர் நாயகம், மேலும் மோசடியில் தொடர்புடையதாகக் கூறப்படும் 13 வர்த்தக வங்கிகளின் பிரதான இணக்கப்பாட்டு (Compliance) அதிகாரிகளை உடனடியாக COPF குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கிரிப்டோகரன்சி போன்ற ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிதி கருவிகள் மூலம் நடைபெறும் வரி ஏய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி மோசடிகள் குறித்து தாம் 2025ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதனை மத்திய வங்கி போதுமான முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளாததே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளது என்றும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் – லீற்றருக்கு ரூ. 20 குறைப்பு; புதிய விலை ரூ. 414
ஓட்டோ டீசல் – லீற்றருக்கு ரூ. 25 குறைப்பு; புதிய விலை ரூ. 382
95 ஒக்டேன் பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
சாகல ரத்நாயக்க உட்பட, நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அமைச்சு அதிகாரிகள் சிரேஷ்ட காவல்துறை தலைவர்களின் பெயர்கள் போதைப்பொருள் கடத்தல்கான் 'ஹரக் கட்டா'வின் கொலையைத் தடுக்கவும், அவரது தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கவும், சாகல ரத்நாயக்க, நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அமைச்சு அதிகாரிகள், சிரேஷ்ட காவல்துறை தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின்படி, இந்த சம்பவத்தின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ஹெரத் முதியன்செலகே கொனரகேதர நிர்மனா இந்திரஜித் பண்டார என்ற 'ஹெர்பி' அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த பெரிய அளவிலான ஊழல் செயல்முறை வெளிப்பட்டுள்ளது.
'மாகந்துர மதுஷ்' என்பவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவூட்டி ஹரக் கட்டாவின் மனைவியை நபர்கள் மிரட்டியதோடு, இந்தப் பணத்தைப் பெற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
ஹரக் கட்டாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, அப்போதைய காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னக்கோனுக்கு 500 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என ஹரக் கட்டாவின் மனைவியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மூன்று மாதங்களுக்குள் ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை (DO) நீக்குவதற்காக, அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு மேலும் 500 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் பணம் அவருக்கு நேரடியாகக் கிடைக்காது என்பதால், சாகல ரத்நாயக்க மூலம் இவ்விடயம் வேறு ஒரு வழியில் கையாளப்படும் என்றும் அவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் விளக்கியுள்ளனர்.
இது தவிர, ஹரக் கட்டாவை கேகாலை சிறை போன்ற ஒரு வழக்கமான சிறைக்கு மாற்ற நீதி மற்றும் சிறைகள் அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு 500 மில்லியன் ரூபாயும், ஹரக் கட்டா தடுப்புக் காவலில் இருந்தபோது அவரது பணிக்காக பிரசாத் ரணசிங்க மற்றும் துசித கஹகல்ல உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளுக்கு மேலும் 500 மில்லியன் ரூபாயும் என அந்த இலஞ்சப் பணம் பிரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ரகித ராஜபக்ச என்ற நபர், பணத்தை விரைவில் ஏற்பாடு செய்வதற்காக, தனது தந்தை தரப்பிலும் சட்டத்துறைத் தரப்பிலும் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொள்வதாகக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில், மேலதிக விசாரணைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டாவுக்கு சலுகை பெற்றுத்தருவதாகக் கூறி இலஞ்சமாக பெறப்பட்ட ரூ.1,200 இலட்சம் (ரூ.12 கோடி) பணத்தில், சரித் அபேசிங்க மற்றும் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் மற்றும் சொத்துகள் வாங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் அனூஷா சம்பந்தப்பெரும தெரிவித்ததாவது:
“இந்தச் சம்பவம் தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார். மேலும் ஹர்பி என்ற நபர் சத்தியப்பிரமாண வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள நதுன் சிந்தக (ஹரக் கட்டா) மற்றும் மிதிகம ருவன் ஆகியோரிடமிருந்தும் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பணத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மூன்றாவது சந்தேகநபரே உண்டியல் முறையில் அந்தப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் ஆடம்பர வாகனங்கள் வாங்கியதும், வீடுகள் கட்டியதும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.”
போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் கும்பல்களுடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பு அண்மைய கைது நடவடிக்கைகள்மூலம் அம்பலமாகி வருவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோரை விடுவிக்க பல மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த காலங்களில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க அரசு வழிமுறைகளே தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தகைய சம்பவங்களை அப்படியே மறக்கடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் தங்கள் செயல்களுக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்பதை அரசு உறுதிசெய்யும் என்றும் அமைச்சர் விஜெபால உறுதிகூறினார்.
தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சொந்த வீடின்றித் தவிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில், கொலன்னாவ பகுதியில் பிரம்மாண்டமான 12 மாடி வீடமைப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பிரமாண்டமான நிதியுதவியுடன் சுமார் 5,784 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் மொத்தம் 624 வீடமைப்பு அலகுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
அத்துடன், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த வீடமைப்புத் திட்டப் பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிறைவடைந்த பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.
தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கருகே இன்று (27) அதிகாலை 12.45 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.