முன்னாள் ஆட்சியாளர்கள் தவறு செய்ததாகக் கூறி மக்கள் இம்முறை புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுத்தாலும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி ஊழல் செய்யும் குழுவொன்று அதிகாரத்திற்கு வந்துள்ளதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பொருளாதாரக் களஞ்சியத்திலிருந்து அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், அதன் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சில கீழ்மட்ட அதிகாரிகள்மீது சுமத்தி அரசு தப்பிக்க முயன்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டத்தை சமமாக அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசுக்கு அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும், அவ்வாறு உண்மையாகச் செயல்பட்டால் அரசில் உள்ள பலர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுப் பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்ற பொதுமக்கள் புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொலிஸாரும் தேசிய போக்குவரத்து ஆணையமும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி பணம் வசூலிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் அல்லது நடத்துனர் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்கவும் பெறவும் அனுமதி இல்லை என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்கப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அந்த தொகையை செலுத்த வேண்டாம் என பயணிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக 118 அல்லது 119 என்ற தொலைபேசி எண்களின் மூலம் புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்திராஜபக்ஷவை கைது செய்யத் தயாராக உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அந்த தகவல்களின் படி, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்பு கொண்டபோது SLPP கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாவது, ஷிராந்தி ராஜபக்ச அவர்களுக்கு இதுவரை CID மூலம் எந்த அழைப்பும் வழங்கப்படவில்லை என்றார்.
மேலும், அவரை கைது செய்யும் வகையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
வாகன உரிமையாளரின் பெயரை குறிப்பிடும் வகையில் பதிவு இலக்கத் தகடு வழங்கும் முறையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்களுக்கு நிலையான பதிவு இலக்கத் தகடு இந்த ஆண்டு மே மாத இறுதியிலிருந்து வழங்க முடியும் என்றும் அந்த துறை குறிப்பிட்டுள்ளது.
அரசின் நிதி தொடர்பான குழுவிற்கு மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகள் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
வாகன உரிமையாளரின் பெயருடன் பதிவு இலக்கத் தகடு வழங்குவது குறித்து மோட்டார் போக்குவரத்து துறையின் ஆணையாளர் பிரியந்த திசாநாயக்க கூறியதாவது:
“முடியும் சர். அதை நாங்கள் செய்ய முடியும். உண்மையில் அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். சிஸ்டத்தை அப்டேட் செய்த உடன், இப்படியான ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்க எதிர்பார்க்கிறோம்.”
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை கண்டறியவும் அத்துடன் அந்த நிதியை மீள் கையகப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பில் தரவு மாற்றம் மேற்கொள்ளப்பட்டு அதனைப் பயன்படுத்தியே மேற்படி நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இவ்வாறான சைபர் தாக்குதல்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பில் அது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,
நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் பிரவேசித்து சைபர் தாக்குதலை மேற்கொண்டு மோசடிக்காரர்கள் முன்னெடுத்துள்ள திருட்டு தொடர்பில் பல்வேறு வழிகளிலும் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய கடன் மறு சீரமைப்பு செயற்பாடுகளில் தொழில்நுட்ப மட்டும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சைபர் தாக்குதல் திருட்டு தொடர்பில் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய பிரிவினருக்கும் நிதியமைச்சு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை மேற்கொண்டு இனம் காணப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதி பரிமாற்றத்தின ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நிதியை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நிலையில் மூன்றாம் தரப்பினரால் அது மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேற்படி நிதி வழங்கப்பட வேண்டிய நிறுவனத்துடன் தற்போது அரசாங்கம் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் அது தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி சைபர் மோசடிக்காரர்கள் நிதியமைச்சின் கடன் முகாமைத்துவ திணைக்கள கணினி கட்டமைப்பில் பிரவேசித்து நிதி மோசடியை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தெரிய வந்ததையடுத்து அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்த அறிவுறுத்தலுக்கு மேலதிகமாக நிதியமைச்சினால் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வருடத்திலும் இதுபோன்ற மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இனங்காணப்பட்டு அதனுடன் சம்பந்தப்பட்ட நான்கு பேர் சேவையிலி ருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 2026 ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான நடவடிக்கைகளின் போதான தகவல்களின் அடிப்படையில் அது விடயம் வெளிப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் உள்ளக ரீதியான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பிரதிபலனாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை நிதியமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.
நிதி அமைச்சின் வெளி வளங்கள் திணைக்களத்தில் இணைய ஹெக்கர்ஸ் ஊடுருவியதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தொகையை வெளியிடவில்லை. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரிப் பணம் ஊடுருவல்காரர்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு , தனது வெளி வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல் மூலம் நிகழ்ந்த இணையப் பாதுகாப்பு மீறல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது .காவல்துறையிடம் முறையீட்டையும் செய்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் 2026 ஜனவரியில் செய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு நாணயப் பணப்பரிவர்த்தனையுடன் தொடர்புடையது. இந்த மீறலைக் கண்டறிந்தவுடன், அமைச்சு ,இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழுவிற்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் உடனடியாகத் தகவல் அளித்தது.
முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு விரிவான விசாரணையை நடத்தும் பொருட்டு, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே ஒரு உள்ளக விசாரணை நடத்தப்பட்டு, பல அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து சட்ட அமுலாக்க நிறுவனங்களுடனும் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கத் தேவையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, இக்குழுவில் திறைசேரியின் இரண்டு பிரதிச் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ. என். ஹபுகல மற்றும் எஸ். எஸ். முதலிகே ஆகியோர் இதன் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்.
தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே. டி. ஐ. பிரேமரத்ன, சட்ட விவகாரங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ. கே. டி. டி. அரந்தர, மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இ. டி. சிரந்த ஆகியோர் மற்ற உறுப்பினர்களாவர்.
மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்ட மோசடியான பணப்பரிவர்த்தனை அறிவுறுத்தல்களின் அபாயத்தை விசாரிக்கும் பணி இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட நிதி காணாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் வாதங்களில் சிக்காமல் இருக்க நாட்டில் உள்ள புத்திசாலி மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், அப்படி இல்லையெனில் இந்த நாடு எந்த நாளிலும் முன்னேற முடியாது என்றும் கோப் (COPA) குழு தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அரசுக்கு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், தற்போதைய அரசோ அல்லது முந்தைய அரசுகளோ தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்யவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றதாக மாறியுள்ளதாகவும், அதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை சரியாக இருந்தால் யாரையும் குற்றவாளியாகக் கருத முடியாது என்றும் கோப் குழுத் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும், நிலக்கரி இறக்குமதி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல், நெருங்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் தரமற்ற நிலக்கரி கிடைத்த சம்பவங்கள் பல உள்ளன என்றும் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய வாகனங்கள் சுமார் 500 எண்ணிக்கை கடந்த 6 மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கிக் கிடக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுங்கத்துறை கூறுவதாவது, பல்வேறு காரணங்களால் இவ்வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதில் சில வாகனங்கள் தனிநபர்களால் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இறக்குமதிக்குப் பிறகு வரிகள் அதிகரித்ததால், அவற்றை விடுவிக்க முடியாமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 83.1% வாகனங்கள் அதே மார்ச் மாதத்திலேயே புதிதாக பதிவு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிகளவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் BYD மாடல் கார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குறைந்த அளவு 2026 ஆம் ஆண்டில் பதிவாகலாம் என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, சுற்றுலா வருகைகள் சுமார் 30% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதுடன், காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக வேளாண்மை துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்துறை துறையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததும், ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, மொத்த பொருளாதார செயல்பாடுகள் பலவீனமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய பொருளாதார நிலையும் இதற்கு தாக்கம் அளிப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், சர்வதேச நாணய நிதியம் (IMF) உலக பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகளை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.
உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாவது இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு ஏற்றுமதிகளையும் பாதிக்கும் என்றும், எரிபொருள், உரம் மற்றும் மின்சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோக சங்கிலி பாதிப்புகளும் பொருளாதாரத்திற்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.