நிதி அமைச்சகம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை 2026 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அரசு எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கிணங்க வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தமானி அறிவிப்பின் படி, பயன்படுத்தப்பட்ட (Used) வாகனங்களுக்கும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களுக்கும் (Reconditioned) இந்த கூடுதல் வரி அதேபோலவே அமலில் இருக்கும்.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புகளின் செல்லுபடியாகும் காலவரம்பே இவ்வாறு அடுத்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிதி துறையுடன் தொடர்புடைய தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, இந்த வரி தொடர்ந்து அமலில் இருப்பதால் எதிர்காலத்தில் வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு எனப்படுகிறது.
முன்னதாக இந்த கூடுதல் வரி குறிப்பிட்ட காலவரம்பிற்குள் மட்டுமே அமலில் இருந்தது. ஆனால் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு நாணய மேலாண்மையை கருத்தில் கொண்டு, இந்த சலுகையை வழங்காமல் அரசு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக சந்தையில் தற்போது நிலவும் உயர்ந்த வாகன விலைகள் அதே நிலைமையில் தொடரும் என சந்தை பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றத்தால், வாகன இறக்குமதியாளர்களும் நுகர்வோரும் எதிர்பார்த்த விலைச் சலுகைகள் மேலும் சுமார் ஒரு ஆண்டுக்காலத்திற்கு தாமதமாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன்) தொடர்பில் சர்வதேச பொலிஸார் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மிக நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் இப்பெண் தொடர்பான சில தடயங்களை சர்வதேச பொலிஸாரால் வெளியிட முடியுமென, எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக பரப்பப்படும் செய்திகளை அடியோடு நிராகரித்த அந்த அதிகாரி, இவை வெறும் வதந்திகள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல சாராஜெஸ்மின் கைது செய்யப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரைக்கும் துலங்காதுள்ள பல உண்மைகள் வெளிவரும்.
இதனால், இக்கைது இடம்பெறக்கூடாதெனவும் சிலர் விரும்புகின்றனர். இந்த அச்சத்தின் அடிப்படையிலேயே சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக சிலரால் வதந்திகள் பரப்பப்படுகின்றன.
ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பலனாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பதாரர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்திலிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவது 253% வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135% இனாலும், மத்திய மாகாணத்தில் 116% இனாலும் மற்றும் ஊவா மாகாணத்தில் 108% இனாலும் விண்ணப்பங்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள், 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ், பதுளை மாவட்ட செயலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
பதுளை மாவட்டத்தில் குறைந்த வயதில் கர்ப்பம் தரிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கும் இடங்கள் போதிய அளவில் இல்லையெனவும் தெரிவித்தார்.
மேலும், பதுளையில் புதிய பிரச்சினையாக சைபர் வன்முறை அதிகரித்து வருவதாகவும், கல்வியறிவு குறைவு மற்றும் மதுபோதையின் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகம் பதிவாகுவது பதுளை மாவட்டத்திலேயே எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் அதிகளவில் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதி பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
JVP யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கு இந்தச் சந்திப்பு சிறந்த அடித்தளமாக அமைந்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்த குமாரசுவாமி மாவத்தையின் கிறீன் பாத் (Green Path) வளாகத்தில் நேற்று (06) இரவு முதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த வளாகத்தில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று (06) இரவு 10.00 மணி முதல் பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை இந்த போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையின் பொது நூலக சுற்றுவட்டத்திலிருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரை (விகாரமகாதேவி பூங்காவிற்கு இணையாக உள்ள வீதி), ஒரு வழியில் மாத்திரம் கொழும்புக்குள் நுழைவதற்கும் கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கும் ஏதுவாக போக்குவரத்து கூம்புகளை இட்டு வீதி ஒதுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,330 ரூபாவாகும்.
அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாகும்.
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்கு (SLTB) பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
வாக்குறுதியின்படி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30% குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (06) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர், ஒரு மின்அலகு உற்பத்தி செய்யும் சராசரி செலவை ரூ.37 இலிருந்து ரூ.29 வரை குறைக்க முடிந்துள்ளதாக கூறினார்.
“மின்அலகு ஒன்றின் உற்பத்தி செலவை குறைக்காமல் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது. இதுவரை அதிக விலையில் வாங்கி குறைந்த விலையில் விற்பனை செய்த நிலை இருந்தது. நாம் பொறுப்பேற்ற போது உற்பத்தி செலவு ரூ.37 ஆக இருந்தது. தற்போது அதை ரூ.29 ஆக, அதாவது 22% வரை குறைத்துள்ளோம். எங்கள் திட்டம் அதை ரூ.25 வரை குறைப்பதாகும். அதைச் சாதித்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணத்தை 30% குறைப்போம்” என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுடன் இலங்கை போர் செய்யவில்லை என்றும், உலகில் யாராலும் தோற்கடிக்க முடியாது என கூறப்பட்ட பயங்கரவாதத்தையே நாட்டின் மூன்று படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தோற்கடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திர தினத்தில், அந்த வெற்றியை பெருமையுடன் குறிப்பிடவும் இராணுவ வீரர்களை வீரர்கள் என்று அழைக்க அரசுத் தலைவருக்கு தைரியம் முதுகெலும்பு இல்லை என்றும், அதனை ஏற்றுக்கொள்ள அரசுக்கும் அரசுத் தலைவருக்கும் மனவலிமை இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதனால் அவர்கள் சிப்பாய்கள் என்று அழைக்கப்படுவதாக நாமல் சுட்டிக்காட்டினார்.