பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிதம்ம தேரர் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் மஹவத்த முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சார்பில் சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷவீந்திர விக்ரமவுடன் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (2) பிரிவின் கீழ் சந்தேக நபரை நிபந்தனை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் இணங்குவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிறிதம்ம தேரரை விடுதலை செய்ய உத்தரவிட்ட மேலதிக நீதவான், அவர் வெளிநாடு பயணிக்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தடுப்பு பணியகத்தில் ஆஜராக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பாராளுமன்ற சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பணித்துள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை தாக்க முற்பட்டமைக்காகவே சமிந்த விஜேசிறி மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்ற அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் முத்து சிவலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் முத்து சிவலிங்கம் பதவி வகித்திருந்தார்.
சில மாதங்களாகவே முத்து சிவலிங்கம் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.
இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் வசிப்பதாகவும் அவர்களில் 12 பேர் மாத்திரமே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஏனைய பெண்கள் அனைவரும் வேறு வழிகளில் ஓமானுக்கு வந்தவர்கள் எனவும், இந்த பெண்கள் அனைவரும் பல்வேறு அனர்த்தங்களுக்கு உள்ளாகி ஆதரவை நாடி வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்டர்கள் குழு நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மருமகன் தாக்கி, மாமியார் பலியான சம்பவமொன்று வலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், 59 வயதுடைய டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன.
அவ்விடத்தில், மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்விடத்திலேயே மாமி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த தெரிப்பெய பொலிசார் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று முடிவடைந்தது.
பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் பதிவாகின.
சபையில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருக்கவில்லை.
சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துபாய் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலா விசா பெற்று நாட்டுக்கு வேலைக்குச் சென்ற இவர்களில் பலர் நாட்டில் வேலை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில இலங்கை இளைஞர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் வீதிகளில் தங்கி இலங்கையர்களிடம் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
வேலை அனுமதிப் பத்திரமாக தயாரிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் காரணமாக டுபாய் மாநிலத்தில் பலர் இலங்கைக்கு திரும்புவதற்கு கடவுச்சீட்டு பெற முடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துபாய் சென்று பலாத்காரத்திற்கு உள்ளான பெண்கள் உள்ளிட்டவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் இசுரு பண்டார வெலிக்கடை சிறைச்சாலையில் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினாரா அல்லது சிறையில் தொலைபேசி கொடுத்தனரா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இசுரு பண்டார நபர் ஒருவருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபடும் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதன்படி, இசுறு சிறைச்சாலையின் நலன்புரி பிரிவில் உள்ள கைதிகளின் தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அவர்களின் தனிப்பட்ட தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக திலினி பிரியமாலியிடம் இருந்து இரண்டு செல்போன்களை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.ஏ சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.