Homeஉலக செய்திவிஜயை குற்றவாளியாக கருத முடியாது - மனு தள்ளுபடி

விஜயை குற்றவாளியாக கருத முடியாது – மனு தள்ளுபடி

spot_img

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

முதலமைச்சர் விஜய், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்தார். 

கரூருக்கு கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி விஜய் சென்றார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை. இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா 20 லட்சம் ரூபா த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 

மேலும், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். 

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். அதன்பின்னரும் சி.பி.ஐ. விசாரணை தொடருகிறது. 

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இந்தநிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10 ஆம் திகதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். 

அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆமானுல்லா கான், ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் ஹுஸேபா அகமதி ஆஜராகி, கரூரில் தமிழக அரசின் சார்பில் வருகிற 10 ஆம் திகதி திட்டமிடப்பட்டு உள்ள நிகழ்வை குறிப்பிட்டு, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். 

இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிப்பதாக தெரிவித்தது. 

இந்நிலையில், நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார் மற்றும் ஆசிஃபா அகமதி ஆகியோர் திமுக தரப்பில் ஆஜராகினர். 

அப்போது திமுக தரப்பில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி அவதூறு என்பது பரப்பப்பட்டு வருகிறது. வெவ்வேறு கருத்துகளை பரப்பி வருபவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 

கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதிகள், திமுக அரசு பதிவு செய்த எஃப்ஐஆரில் கூட விஜய் பெயர் இல்லை. ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள். 

ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு அவதூறு வழக்கு பதிவு செய்யலாமே? பொது வெளியில் பேசியதற்கு எல்லாம் சிபிஐ விசாரணை கேட்பீர்களா? 

முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புகிறீர்களா? 

கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றவாளி என்று கூறுவதை ஏற்க முடியாது. முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதா? 

இந்த வழக்கை இப்போதே தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் என திமுக தரப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். 

நீதிபதிகளின் கண்டனத்தை அடுத்து மனுவை திரும்ப பெறுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

spot_img

Latest articles

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள்...

மாவீரன் 2 வருகிறது

'மண்டேலா' படத்தின் மூலம் தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.  இதனைத்...

போர்த்துக்கல் அணி வெளியேற்றம், ரொனால்டோவுக்கு வாழ்த்து

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 'சுற்று 16'ஆட்டத்தில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து...

கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை!

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை...

More like this