நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியை பாதுகாக்குமாறு, ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அதில் அந்த அதிகாரியின் நடவடிக்கையால்தான் வன்முறை நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த அதிகாரியின் செயலால் நாங்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம். நாங்கள் ஒரே அணியாக இந்த சீருடையை அணிகிறோம். அவரைப் பற்றி ஏன் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன?” என்று அமைச்சரிடம் கூறினர்.
மேலும், அந்த கலவரத்தின் போது கைதிகள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.
அந்த அதிகாரியை “வீரர்” எனக் குறிப்பிட்டதுடன் அவர் மீது சுமத்தப்படும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதியான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதேவேளை இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.




