நாட்டில் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, உள்நாட்டு தொழிலாளர் சந்தையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஒரு கிராமத்திற்குச் சென்றால்கூட ஒரு திறமையான கைவினைத் தொழிலாளியைத் தேடுவது மிகவும் கடினமாகிவிட்டது. அந்தளவுக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கும் போது, வெல்டிங் போன்ற தொழில்களுக்காக மட்டும் 10,000-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வேகமான வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். யார் என்ன சொன்னாலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட தற்போது தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடு இலங்கையே.”



