உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குவிதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை (CESS) நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சுங்க வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி பொருட்களுக்கு செஸ் வரிவிதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் பெரும்பாலான உள்நாட்டு கைத்தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே சார்ந்துள்ளதாக பிரதி அமைச்சர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக உற்பத்திச் செலவும் குறிப்பிடத்தக்கஅளவில் அதிகரித்துள்ளதாகவும், எனவே செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செஸ் வரி மற்றும் PAL (Ports and Airports Levy)ஆகியவை நீக்கப்பட்டதுடன், புதிய சுங்க வரிகட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, புதிய சுங்க வரி முறை நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது:
- 0%
- 10%
- 20%
- 30%
மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0% சுங்க வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இறுதி உற்பத்திப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரை சுங்க வரிவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர்அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி கட்டமைப்பின் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதுடன், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் செலவைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




