ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தற்போது நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பழைய போகம்பர சிறைச்சாலைக்கு அடுத்த வாரம் கைதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பழைய போகம்பர சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த சிறைச்சாலைக்குத் தேவையான அதிகாரிகளை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




