web log free
April 25, 2025
kumar

kumar

ஹலிஎல டீன்புர அம்போக்க பகுதியில் 14 வயதும் 7 மாதமும் நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 4 மாதம் கர்ப்பிணியாக்கிய 42,36,28 வயதுகளை உடைய மூன்று நபர்களை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டபோது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விடயத்தை அறிந்திருந்தும் குறித்த சிறுமியின் தாயார் மறைத்துள்ளார்.

இதனால் சிறுமியின் தாயாருடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த ஹாலிஎல பொலிஸார் சந்தேக நபர்களை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேக நபர்களை 14 நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலபிட்டிய, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் கணவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மீனவராக தொழில் செய்து வருகிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கணவர் அவரை அடித்து, அவரது சீருடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் Solve Xi அணி NCC அகாடமி அணியை தோற்கடித்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

M.W. ராஜசிங்கம் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த பெப்ரவரி 6ம் திகதி அன்று NCC மைதானத்தில் 50 ஓவர்கள் போட்டியாக இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சோல்வ் Xi அணி 48.3 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்த அணியைச் சேர்ந்த செல்வராஜன் ருஷாந்தன் மற்றும் மகாதேவன், கோபியன் ஆகியோரின் பெறுமதியான ஓட்டங்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தனர். 

இந்த சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய NCC அணி ஒரு கட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது, ஆனால் ஹன்சஜா குணசேகர மற்றும் அஷான் ஹப்புஆராச்சி ஜோடி இணைந்து பொறுப்பை ஏற்று ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை குவித்தது.

ஹன்சஜாவின் ஆட்டமிழப்புடன் பின்னடைவை சந்தித்த NCC அணி அதன் தலைவர் விமுக்தி பண்டார மற்றும் ஷமல்க ஹேஷான், நுவான் ஜயரத்ன மற்றும் நிமேந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதும் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் NCC அணி 209 ஓட்டங்கள் பெற்று தோல்வியடைந்தது. 

சோல்வ் பவுண்டேஷனின் தலைவி பவதாரணி ராஜசிங்கம் வடக்கிலிருந்து இந்த அணியை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன் தனது கணவர் தீபன் ராஜசிங்கத்துடன் இணைந்து திறமையான யாழ். இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார். 

NCCயின் வாரியம் மற்றும் அதிகாரிகளுக்கும் குறிப்பாக அசோக டி சில்வா, லலித், திலக் மற்றும் பிரான்கி ஆகியோருக்கு வடக்கிலிருந்து சோல்வ் Xi க்கு எதிராக கொழும்பில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

போட்டி நிலவரம் வருமாறு, 

சோல்வ் Xi அணி - 48.3 ஓவர்களில் 217 /10

ஜெலாம் கோபியன் 47,

ஜெயக்குமார் சஞ்சீவன் 48,

அந்தோணி அருண்பிரகாஷ் 45,

செல்வராஜன் ருஷாந்தன் 11,

மகாதேவன் கோபியன் 15 நாட் அவுட்,

பந்து வீச்சில் NCC சார்பில்

சசிந்து கவிதிலக 2/17,

அஷான் 7/39,

நுவின் 7/39

விமுக்தி பண்டார 3/28)

NCC அகாடமி - 50 ஓவர்களில் 209/9

ஹன்சஜா குணசேகர 69,

அஷான் ஹப்புஆராச்சி 44,

விமுக்தி பண்டார 19,

ஷமல்க ஹேஷான் 14,

நுவான் ஜெயரத்ன 10,

நிமேந்திரா 12

பந்துவீச்சில் சோல்வ் Xi அணி சார்பில்

நிரியநாதன் நிருக்ஷன் 2/38,

பிரதீப் 2/34)  

 

 

 

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் ஏற்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்துவரும் வடக்கு முதல் தெற்கு வரையான கையெழுத்து பெறும் திட்டத்தின் அடுத்தக் கட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி 281ம் இலக்க முகவரியில் உள்ள சமூக கேந்திர நிலையத்தில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் மலையக அரசியல் அரங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

நுவரெலியா, யாழ்ப்பாணம் என பல மாவட்டங்களிலும் இவ்வாறு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் பிரநிதிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாரியளவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த கூட்டணி தெரிவித்துள்ளது.


எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த போதிலும், விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிப்பார்கள் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என்றும் இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டுமென்று என்றும் வன்முறையை தவிர்க்க வேண்டும் என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் உடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக இரு தரப்பு மீனவர் குழுக்களிடையே விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்.

மேலும், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

சம உரிமை, அமைதி, நீதி மற்றும் மரியாதை, இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

"இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஒவைஸி பேசினார்.

“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சினை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும் என்று ஒவைஸி எச்சரிக்கும் வகையில் பேசினார்.

 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை தற்கொலைக்கு காரணம் தனது செயற்பாடு என்று அயலவர்கள் பேசத்தொடங்கியதால் சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,692 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 1263 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று உத்தரவிட்டார்.

விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் பலர் உள்ளமை விசாரணைகளில் புலனாவதாக மன்றில் இன்று தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் விடயங்களை முன்வைப்பதற்கு போதிய கால அவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் மற்றுமொரு ஊழியரையும் விடுதலை செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார்.

இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் குறித்த சந்தேகநபர்கள் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லையென்பது விசாரணைகளில் தெரியவந்ததால் அவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷர்லி ஹேரத் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதுவரை நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்படவில்லையென, பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தெரிவித்தார்.

சந்தேகநபரான குறித்த வைத்தியர் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மன்றில் விடயங்களை முன்வைக்குமாறு அவர் விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தேவாலயத்தின் எந்த ஊழியரும் தொடர்புபடவில்லையென கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசாரணைகளின் ஆரம்பத்திலேயே தெரிவித்த விடயம், இன்று வரை நிரூபணமாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd