நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதசா தெரிவித்துள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கிய வகிபாகத்தை ஆற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக சுயாதீன ஊடகங்களும் சிவில் சமூகமும் ஜநாயகத்தை காப்பதில் சிறப்பு பங்காற்றுகின்றன. இந்நிலையில்,நீதித்துறையில் அழுத்தங்களை பிரயோகிப்பது மற்றும் அதன் செயற்பாடுகளில் தலையிடுவதை எமது கட்சி ஏற்றுக்கொள்ளாது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கவும், உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுவதற்கும் முயற்சிக்கப்படுகிறது.இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயற்பாடாகவே கருதப்படுகிறது.இதனால்,இம்முயற்சியை கண்டிக்கிறோம்.நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாதிருப்பதும் ஒரு வகையான அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளே.
நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயல்முறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியையும் நியாயத்தையும் பாதுகாக்கும் கொள்கைகளை உறுதிப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் முற்போக்கு எதிர்க்கட்சியும் தயாராகவுள்ளன.
ஜனநாயகத்திலும், நீதித்துறையிலும் கை வைக்காது, அதன் சுயாதீனத்தை பாதுகாப்பது அவசியம்.எனவே,ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கினர்.எனவே இந்த ஆணையை காப்பாற்ற அரசாங்கம் முன்வர வேண்டும்.



