பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகியோரின் அபார சதங்களின் உதவியால் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீனின் ஆட்டமிழக்காத சதம் வீணான நிலையில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டுக்காகப் பெற்றுக்கொண்ட 203 ஓட்டங்கள் வரலாற்றுச் சாதனை இணைப்பாட்டம் இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1–1 எனச் சமன் செய்துள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், சித்ரா அமீன், அணியின் இன்னிங்ஸை வேகமாகக் கட்டமைத்தார். முக்கிய இணைப்பாட்டங்களை ஏற்படுத்திய அவர், கடைசி ஓவரில் சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆயிஷா ஜாஃபர் (49), முனீபா அலி (45) ஆகியோரின் முக்கிய பங்களிப்புடனும், அணித்தலைவி பாத்திமா சனா ஆட்டமிழக்காமல் அதிரடியாகப் பெற்று;க்கொண்ட 25 ஓட்டங்கனுடனும் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து, சேத்தனா விமுக்தி, இனோகா ரணவீர மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.



