ஜெயம் ரவியின் – ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனு தற்போது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மனுவில், தனது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகள், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடும்பம் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கைத் தரத்தைத் தொடர்ந்து பராமரிக்க மாதந்தோறும் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று ஆர்த்தி ரவி கோரியிருந்தார்.
இந்த மனுவை விரைந்து விசாரித்து முடிவு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி ரவியின் கோரிக்கையை குடும்ப நல நீதிமன்றம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் நீதிமன்றம் விதித்துள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப காலமாக ரவி மோகனின் செய்தியாளர் சந்திப்பு, கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஆர்த்தி ரவியின் சமூக வலைதள பதிவுகள் ஆகியவை இந்த வழக்கை பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விவகாரமாக மாற்றியுள்ளன.




