எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.
இந்நிலையில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கண்டி - பேராதனை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் ஆளும் கட்சி எம்பிக்களின் விசேட குழு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்க உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் உரிய மனுவை சமர்ப்பித்திருந்தார்.
கிருலப்பனை மாவத்தை, இலக்கம்: 54க்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு வானத்தை நோக்கிச் சுட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, சந்தேக நபர்களின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடாத வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
*மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்
*பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்
*மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தகைய அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என அரசியலமைப்பு சபை நேற்று (17) தீர்மானித்துள்ளது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி மீண்டும் பொலிஸ் மா அதிபரை அந்த பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து பொலிஸ் மா அதிபரை மீள் நியமனம் செய்வது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதி இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்லாமிய போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் காணாமல் போன அனுலா ஜயதிலக்க உயிரிழந்தமை இன்று (17) உறுதிப்படுத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சடலம் அடையாளம் காணப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலிய பொலிஸார் அனுலா ஜயதிலக்கவின் உடலை தூதரகத்திடம் ஒப்படைப்பார்கள் எனவும் இறுதி மரியாதை மற்றும் சமய சடங்குகள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் கிடைக்கும் எனவும் பண்டார தெரிவித்தார்.
இறுதிக் செயற்பாடுகளின் பின்னர் அனுலா ஜயதிலகவின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இஸ்லாமிய போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட குழுவில் இலங்கையர்களும் உள்ளனர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பண்டார தெரிவித்தார்.
ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடந்ததாக இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன், மேற்கில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களை வெளியேற்ற பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான வரைவு சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 34 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1) இன் பிரகாரம் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி அறிவிப்புகளை வெளியிடும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொழில் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரச உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
17 இலட்சம் அரச ஊழியர்கள் மிகவும் துரதிஷ்டவசமான தலைவிதியை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது வாழ்க்கைச் சுமை எகிறிவிட்டது. தண்ணீர், மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய உணவு, மதிப்பீட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்படியாகாத வகையில் உயர்ந்துள்ளது. இன்று எமது பிள்ளைகள் தமது கல்வியை ஒழுங்காகச் செய்ய முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர். இனியும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
வாழ்க்கைச் செலவு இவ்வளவு உயர்ந்தாலும் எட்டு வருடங்களில் ஐந்து சதம் கூட சம்பள உயர்வு இல்லை. ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எம்முடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அரச சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. வாக்குறுதியை மீறினர். இதன் மூலம் எமக்கு அளித்த வாக்குறுதி பலமுறை மீறப்பட்டது. இனியும் ஏமாற மாட்டோம். வரவிருக்கும் பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பள உயர்வு கிடைக்கும் என்பதே எங்களின் இறுதி நம்பிக்கை. அப்படி இல்லை என்றால் ஜனவரி முதல் தொழில் ரீதியாக கடுமையான முடிவுகளை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இம்மாதம் 30ஆம் திகதி அதன் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பலமான போராட்டங்களை நடத்த எதிர்பார்க்கின்றோம்" என்றார்.