தங்கள் சொந்தக் காணிகளையே
விடுவிக்கக் கோருகின்றனர் மக்கள்
- தென்னிலங்கை சிவில் சமூகத்தினரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
"இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன்."
- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் நேற்று புதன்கிழமை காலை வயாவியானில் நடைபெற்றது.
அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், "வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம். பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இந்த அரசின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம். அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம்." - என்றார்.
இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர்,
"2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்ட செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை எனப் பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப்போன்று மீள்குடியமர்ந்தார்கள். 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி.
இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனையுடைய ஒருவர். எனவே, இந்த அரசின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.
இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையைத் தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன்." - என்றார்.
இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது.
இந்த அலைகள் தான் எம் உறவுகளை காவுக்கொள்ளப்போகிறது என்பது தெரியாமலேயே அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கடலில் நிகழ்ந்த மாற்றத்தை காண கரையோரங்களில் ஏராளமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
அது வரை கண்டிராத அந்த அரிய நிகழ்வை என்னவென்று தெரியாமலேயே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சுனாமி என்னும் ஆழிப்பேரலை. கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் அழிந்து போனது.
உயரிழந்து, உடமையிழந்து ஏராளமான மக்கள் நிர்கதியாகினர். அதுவரை மானுட பெருமானங்கள் பார்த்து பார்த்து கட்டிவைத்த மாடமாளிகைகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர பங்களாக்கள் என ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி அழித்து சென்றது சுனாமி என்னும் இராட்சத அலை.
இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காணாமல் போயினர்.
இந்நிலையில் சுனாமி பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களையும், காணாமல்போனவர்களையும் நினைவுக்கூறும் நிகழ்வு டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படுகின்றது.
2012 முதல் இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது.
நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில் காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த ரயிலிருந்த 1,700 பேருடன் சேர்த்து எமது நாட்டில் 35,000 மக்கள் வரை உயிரிழந்தனர்.
இலங்கை ரயில் சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அனைவரையும் எல்லையற்ற சோகத்தில் ஆழ்த்திய ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சர்வதேச ரீதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலைப் போன்று மீண்டும் ஒரு முறை இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க எமது செய்திப்பிரிவு பிராத்திக்கின்றது.
அதற்கமைய, சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதுதவிர, மாவட்ட மட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தனது பெயரை பயன்படுத்தி வெளிநாட்டில் பணமோசடி
-அமைச்சர் ஹந்துன்நெத்தி CID யில் முறைப்பாடு
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி போன்று, நபரொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டில் வாழும் இலங்கையரை வட்ஸ்அப் குரூப் மூலம் ஏமாற்றி பணம் வசூலிக்கும் மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (24) செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்பவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் மற்றும் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றை அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டில் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி சூம் தொழில்நுட்பத்தினூடாக வெளிநாட்டில் வாழும் இலங்கையைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக சுனில் ஹதுன்நெத்தியின் கையொப்பமிடப்பட்ட போலி விளம்பரம் வட்ஸ்அப் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி செயலுக்கு தனது பெயர், கட்சியின் பெயர் மற்றும் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழும் அப்பாவி இலங்கையருக்கு நிதி மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் என் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இவ்வாறான தீங்கிழைக்கும் செயல்கள் அந்த நம்பிக்கையை நேரடியாகக் குலைத்து, என் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கைக்குக் கேடு விளைவிப்பதாகவும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம். நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நத்தார் வாழ்த்துத் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை இன்றைய நமது சமூகத்தை நாகரீகமாக்க போதுமானதாக இருந்தது.
அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மையப்படுத்திய நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் மத விழா மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் அனைத்து இனம், மதம், கட்சி, நிறம், இளையோர், முதியோர் என பாகுபாடின்றி கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகவும் உள்ளது. இதன் அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்டு நாமும் ஒரு நாடாக முன்னேற வேண்டிய நேரம் வந்துள்ளது.
இந்த தருணத்தில் நமது நாடு எதிர்கொள்ளும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமெனில் நாமும் இனம், மதம், வர்க்கம், கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன், நல்லிணக்கத்துடன், அன்புடன் செயல்பட வேண்டும். இது நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அடுத்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்ப்பு விளக்குகளுக்கு பதிலாக முன்னேற்றத்தின் விளக்குகள் ஒளிரும்.
இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான இனிய நத்தார் வாழ்த்துக்களை மனமார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஓர் அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கிறிஸ்மஸ் வாழ்த்துத் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.
நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.
நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையைக் கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகின்றோம்.
சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகின்றோம். அந்தப் பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும்.
பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசு நாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஓர் அரசு என்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான அரசியல் கலாசாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஓர் அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் 50 மேலதிக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
நத்தார் தினமான நாளை (25) பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐ.எஸ்.ஐ.எஸ் வெடிகுண்டுகள் மூலம் ஆளில்லா விமானத்தை கொண்டு தாக்குதலை நடத்தும் அபாயம் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருந்த நிலையில், அறிக்கைகளின் உண்மைகளை மறைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை முற்றாகப் பாதிப்படையச் செய்ய வேண்டும் என்ற வகையில் பொது பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மொட்டு கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
பாதாள உலக குழு மற்றும் புலிகளும் இயக்கம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றமை குறையவில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது உயிருக்கு ஏன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக 13 புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கமகே தெரிவித்தார்.
ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு 5 லிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பான அறிக்கையை கோரியதாகவும், அந்த அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் அறிக்கையளித்துள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகளவில் காணப்படுவதே அவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டொலவத், மகிந்த ராஜபக்சவை பாதுகாத்து வந்த இராணுவத்தினரை குறைத்தாலும் செலவு குறையப்போவதில்லை என கூறுகிறார்.
அந்த இராணுவ வீரர்கள் மீண்டும் இராணுவ முகாம்களுக்குச் சென்றாலும் அவர்களது சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்துகின்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வுகள் இடம்பெற்றவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் கண்டியில் அறிவித்தார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் முடிவடையும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.