கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் லீற்றர் ஒன்றின் நட்டம் 88 ரூபாவாக உள்ளதாகவும் எனவே டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தாம் பெறும் வருமானத்திற்கு ஏற்ப விலைவாசி உயர்வை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு காரணமாக மதுசார உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாராயம் உட்பட 23 கலால் அனுமதி பெற்ற மதுபான உற்பத்திகள் உள்நாட்டில் குறைவின்றி காணப்படுவதாக அதன் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
அவற்றிற்குத் தேவையான மதுசாரம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இன்னும் உள்ளூர் சந்தையில் கிடைப்பதாக அவர் கூறினார்.
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளை அடிப்படையாக வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய புதிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது அதில் ஒரு அமைச்சு மற்றும் இரு இராஜாங்க அமைச்சுகளின் பொறுப்புகள் மீண்டும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
வன பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் மற்றும் அரச மர கூட்டுத்தாபனம் ஆகியன வனஜீவராசிகள் மற்றும் வன வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பதிவாளர் நாயகம் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், தேசிய பாதுகாப்பு நிதியம், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் நமக்காக நாம் நிதியம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக புதிய வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர்முகாமைத்துவ நிலையம், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை, தேசிய இடர் நிவாரண சேவை, வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆகியன இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டப்ளியூ.பீ. பாலித்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏசியன் மிரருக்கு கிடைக்கும் செய்தியின்படி, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உணவு விடுதியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிச்சாலையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
திரவ பால் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று (8) காலை உணவகத்தில் குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மாத காலமாக விநியோகஸ்தர்கள் பாராளுமன்றத்திற்கு திரவ பாலை வழங்கவில்லை என பாராளுமன்ற உணவு விநியோக பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மில்கோ நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும் போதிய பால் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில போத்தலில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில உணவுப் பொருட்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிருபம் நேற்று அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் உரித்தாகும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக விசேட கடமைக்காக செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடமைகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதால் தூர இடங்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களை முடிந்தளவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பதவி விலகும் நோக்கில் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் இருந்ததால் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாமாக முன்வந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நீக்கம் செய்துள்ளதால் ஆட்சியை தக்க வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தன்னை விமர்சிப்பவர்கள் எதிரிகள் அல்ல என்றும், பொறுமையாக பணியாற்ற வேண்டும் என்றும், அரசியல் சகிப்புத்தன்மை குறித்து பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
தங்களின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
மோசமான அழிவை நோக்கிய பயணத்தில் தேசிய சுதந்திர முன்னணி தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாது என்பதை தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டினார்.
பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘ஹிருணிகா ஒரு இரும்புப் பெண். அவள் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதி வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக் கழிவு கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இப்போது மொட்டில் இருந்து மலசல துர்நாற்றம் வீசுகிறது.' என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.