இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியுடன் கட்சியில் வலுவான மாற்றம் தேவை என்று ஐக்கிய மக்கள் சக்திக்குள் கருத்து பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாசவின் தலைமையில் இதுவரை இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் இரண்டு பொதுத் தேர்தல்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டிலும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் கிடைக்காமல் தடுப்பதில் கட்சி தோல்வி கண்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சஜித் பிரேமதாச 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஆளும் கட்சிக்கு 150 கேள்விகளை முன்வைத்த போதும் அது மக்களைக் கவரவில்லை என்பது அவர்களின் கருத்தாகும்.
அத்துடன், மக்கள் பாரம்பரிய அரசியலை முற்றாக நிராகரித்து இடதுசாரி அரசை உருவாக்கி மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அதிகாரத்தை வழங்கியிருக்கும் இவ்வேளையில் sjb பிரதான எதிர்க்கட்சியாக பலமான மாற்றத்தை மக்களிடம் காட்ட வேண்டும்.
கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் இருக்கும் நிலையில், கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள்ளேயே பலத்த கருத்து எழுந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்ஷ டி சில்வா கட்சியில் பிரபல்யமான, படித்த, புத்திசாலி மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருப்பதால், அவர் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்த பொருத்தமானவர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியில் உள்ள பலர் இந்த முன்மொழிவுக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலில் அதன் தலைவர் திலித் ஜயவீரவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி அவரது பெயரை பரிந்துரை செய்து கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்ப உள்ளார்.
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சிக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.
'வெற்றிகரமான பிரச்சாரத்தை நடத்த எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்கள் 9 அக்டோபர் 2024 அன்று எங்கள் கட்சியை உருவாக்கினோம். பிரச்சார நடவடிக்கைகளுக்கு 22 நாட்கள் மட்டுமே இருந்தது என்றார்.
இத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியால் எந்த ஆசனத்தையும் வெல்ல முடியவில்லை.
தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்வதற்கு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தன்னையும் பழனி திகாம்பரத்தையும் வெற்றிபெறச் செய்ய தோட்ட மக்கள் உழைத்ததாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பி.எம்.விரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா நகரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதாக வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த வி.இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற வைப்பதற்கு தோட்ட மக்களும் பெருந்தொகையாக வாக்களித்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 225, இதில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைக் குழுவும் பெறும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
அதன்படி, அண்மைய (14) தேர்தலில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை கீழே,
தேசிய மக்கள் சக்தி - 18
ஐக்கிய மக்கள் கூட்டணி- 5
இலங்கை தமிழ் அரசு கட்சி- 1
புதிய ஜனநாயக முன்னணி - 2
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1
சர்வஜன அதிகாரம்- 1
இதேவேளை, 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பதவிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல் தொடர்வதாக அதன் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட உள்ளது.
இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய கட்சிகள் இன்னும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்கவில்லை.
2024 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கூடுதலான அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.
21 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு 141 ஆசனங்கள் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்திக்கு 6,863,186 வாக்குகள் கிடைத்ததுடன் இது 61.56 வீதமாகும்.
தேசியப் பட்டியலில் கிடைத்துள்ள 18 ஆசனங்கள் அடங்களாக தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 40 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றதுடன் இது 17.66 வீதமாகும்.
257,813 வாக்குகளை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றியது.
புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளை பெற்றுக் கொண்டது.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 ஆசனங்களையே கைப்பற்ற முடிந்தது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளுடன் 3 ஆசனங்களை கைப்பற்றியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 87,038 வாக்குளை பெற்று 3 ஆசனங்களை தனதாக்கியது.
அத்துடன் சர்வஜன அதிகாரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு இலக்கம் 17, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளன.
2024 பொதுத் தேர்தலின் முதல் பெறுபேறுகளை இரவு 10 மணிக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாலை 5 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, வாக்குப் பெட்டிகள் அனைத்தும் கிடைத்தவுடன் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இந்த வருட பொதுத் தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 8888 வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் 2034 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், எண்பதாயிரம் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.
இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது.
இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
"அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை த் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்."
- இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தற்காலிக உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமைகளில் ஈடுபடாமலிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இ - சேவைக்குள் பிரவேசித்து முறையான வழிமுறைகளை பின்பற்றி தமக்கான வாக்காளர் அட்டைகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமல்ல. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகின்றது. இ - சேவை ஊடாக வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளவர்கள் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டையை கொண்டு செல்வது வாக்காளர்களுக்கும், வாக்களிப்பு மத்திய நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இலகுவானதாக இருக்கும்.
வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தை அண்மித்த பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முன்னெடுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொகுதிகளில் உள்ள காரியாலயங்கள் மற்றும் அவற்றை சூழ அமைக்கப்பட்ட பதாதைகள், கட்சி கொடிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்.
வாக்களிப்பு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமையாகும். ஆகவே, வாக்களிக்கச் செல்வதற்கு அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு தாபன விதிக்கோவையின் பிரகாரம் குறைந்தபட்சம் 4 மணித்தியாலங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அத்துடன் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
தனியார்துறை சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவது தொழில் அல்லது சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும்.
தூரப் பிரதேசங்களில் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிக்கச் செல்லவுள்ள வாக்காளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும்.
வாக்களிக்கச் செல்லும்போது தேசிய அடையாள அட்டை (பழையது அல்லது புதியது), செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜை அடையான அட்டை ஆகியவற்றைக் காண்பித்து தமது ஆளடையாள அட்டையை உறுதிப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பிக்க தவறும் பட்சத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது.
வாக்களிப்பு தினத்தன்று வாக்காளர்கள், வாக்களிப்பு மத்திய நிலைய பணிக்குழாம், போட்டியிடும் வேட்பாளர், வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், வாக்களிப்பு நிலைய கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும்.
போட்டியிடும் வேட்பாளர் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும். ஆனால், வாக்களிக்கும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது.
வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் தொலைபேசி கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாக்களிப்பு மத்திய நிலையத்தையும், வாக்களிப்பதையும் புகைப்படமெடுப்பதையும், காணொளியாகப் பதிவிடுவதையும், தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கைவசம் வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி விட்டு வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சீட்டுக்கள் இரண்டு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. மொனராகலை, பொலனறுவை, கேகாலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 'ஒற்றை நிரல்' வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும். ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கு 'இரட்டை நிரல்' வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படும்.
வாக்காளர் ஒருவர் தாம் விரும்பும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்தின் முன்பாகப் புள்ளடியிட்டு வாக்களிக்க முடியும். வேட்பாளர் விருப்பு வாக்கு ஒன்றை அளிக்க விரும்புவாராயின் ஒரு விருப்பு வாக்கு இலக்கத்தின் முன்பாகப் புள்ளடியிட முடியும்.
இரண்டு விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் இரண்டு விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்னிலையில் புள்ளடியிட முடியும். அதேபோல் 3 விருப்பு வாக்குகளை அளிக்க விரும்புவதாயின் 3 விருப்பு வாக்கு இலக்கங்கள் முன்பாகப் புள்ளடியிட முடியும்.
வாக்குச்சீட்டில் உத்தியோகபூர்வ அடையாளமிடாமல் இருத்தல், வாக்குச்சீட்டில் வாக்களிப்பு அடையாளமிடமலிருத்தல், அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிக்காமல் விருப்பு வாக்கு மாத்திரம் அளித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தல் ஆகிய காரணிகளால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.
தேர்தல் சட்டங்களைச் சிறந்த முறையில் முழுமையாக செயற்படுத்திய காரணத்தால்தான் இம்முறை தேர்தல்கள் வன்முறைகள் மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்களின் குடும்பம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதன் விளைவு தாங்கள் ஆதரவளித்த வேட்பாளர்களுக்குத் தாக்கம் செலுத்தாது. ஆகவே, எந்நிலையிலும் உங்கள் குடும்பத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுங்கள்.
வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்றுகூடல், ஊர்வலம் மற்றும் பேரணியாகச் செல்லல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள். முடிவுகள் வெளியானவுடன் பொது இடங்களில் பட்டாசு கொளுத்துவது சட்டவிரோதமான செயற்பாடாகும். முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்குச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்புக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வாக்கு உங்களின் உரிமை மற்றும் பலம். அந்த உரிமையை நாளை வியாழக்கிழமை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். அத்துடன் சட்டம் மற்றும் ஒழுங்கையும் பாதுகாக்க ஒத்துழையுங்கள்." - என்றார்.