web log free
April 28, 2025
kumar

kumar

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான அறிவிப்பின்படி, அத்தகைய அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு தமது செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பட்டியலை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது தாயாரின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்குச் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஜனாதிபதியின் தாயார் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.

பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பஸ்ஸில் 30 பேர் வரை பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் காயமடைந்த நிலையில் திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரகசிய பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள்.

அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும்.

ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.

ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.

அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.

முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.

நாட்டின் அரிசி நெருக்கடிக்கு முக்கிய காரணம் கடந்த அரசாங்கம் ஒரு சிலருக்கு அரிசி ஏகபோகத்தை உருவாக்கி சந்தைப்படுத்தல் சபையை பலவீனப்படுத்தி அரச இயந்திரத்தை உடைத்ததேயாகும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உப்பு, அரிசி, தேங்காய் இல்லை என்றால் அதற்கு முன்னைய அரசாங்கங்களே பொறுப்பு எனவும் தற்போதைய அரசாங்கம் இன்னும் 40 நாட்களை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டின் அபிவிருத்திக்காக காத்திருக்கத் தயாராக இருக்கும் மக்கள் 48 நாட்கள் கடக்கும் முன்னரே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கருத்தியலை சுமந்து வருவதாகவும் நளீன் ஹெவேகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (20) கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று காலை முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். 

அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். 

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். 

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

அரச சேவையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால் அரச சேவையை பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் செலவில் சிக்கல் இருப்பதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி 'நில மேதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) மாவட்ட செயலாளர்/அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார். 

அரச சேவையை ஒரே உறுதியுடன் கூடிய முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் முகவர் பதவியிலிருந்து மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய சேவை சுமார் 200 வருடங்கள் பழமையானது என்றும், நாட்டைப் புதிய பாதையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது என்றும், தற்போதைய நிலையில் திருப்தி அடைய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். 

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இன்றுடன் முடிவடையவிருந்த நிலையிலேயே, அக்காலம்,ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை நாடளாவிய ரீதியில், தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 35,600 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெற்றுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd