– நிர்மால் ரஞ்சித் தேவசிறி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்த சம்பவம், தற்போதைய அரசின் வெளிப்படையான தோல்வியையும், அரசு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவாலையும் பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர் டாக்டர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஜன பலய அமைப்பின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலை அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டால், இவ்வாறான ஒரு சம்பவம் எந்த நேரத்திலும் நடைபெறக்கூடியதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த அரசுக்கு சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவான திட்டமோ அணுகுமுறையோ இருக்கவில்லை. சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அறிவிருந்தபோதிலும், அதனை முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டியிருந்தது. ஆனால், இந்த நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களையும் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், சிறைச்சாலை மறுசீரமைப்பு இல்லாமல் அந்த முயற்சிகள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது கைதிகளின் பிரச்சினை மட்டுமல்ல; முழு நிர்வாக அமைப்பின் சீர்கேட்டைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை நாட்டின் கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளுடனும் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் இளைஞர்கள் குற்ற உலகிற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் தள்ளப்படுவதைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகவும், சிறைச்சாலை நெருக்கடிக்கு தீர்வு காணும்போது இந்த சமூகக் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பை நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்வதாக கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்றும், அரசிடம் தெளிவான மறுசீரமைப்பு செயற்திட்டம் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தங்கள் போன்ற விடயங்களை தற்காலிக அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறான தீவிரமான சமூகப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி வலியுறுத்தினார்.




