– சஜித் பிரேமதாச
எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல் எந்தவொரு அரசாங்கத்திற்கும் அதிகாரத்தை வழங்கும்போது, நியாயமான பெரும்பான்மையை மாத்திரம் வழங்கி, நாட்டில் நீதி, நியாயம் மற்றும் சுபீட்சத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அன்றைய காலகட்டத்தில் நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான காலகட்டத்தில், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதே நாட்டின் தற்போதைய முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தெரிவுக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடாமல், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் அனர்த்தங்கள் மற்றும் காலநிலை நிலைமைகள் தொடர்பிலும் அரசாங்கம் அலட்சியமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




