புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஹெரோயினுடன் புத்தளம் பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பால்ஸ் வீதியில் உள்ள மாநகரசபையில் வசிக்கும் 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட போது, மூன்று கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான ஐ.தே.க வேட்பாளர் ரெக்கவல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட போது, ஹெரோயின் உறுப்பினரின் கைகளில் இருந்ததாகவும், அதனை வாங்குபவர் வருவார் என ஏற்கனவே காத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று தடவைகளில் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவர் அடங்கிய விசேட வைத்திய குழுவை நியமித்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (பிப்ரவரி 17) உத்தரவிட்டுள்ளார்.
அங்கு ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையை நியமிப்பதற்காக விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, இந்த நிபுணர் மருத்துவ குழுவை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்து அனுப்ப வேண்டும் என்றும் நீதவான் அதே உத்தரவில் தெரிவித்தார்.
ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மாத்தறையை சேர்ந்த 26 வயதான நிசல் சாருக்க விதானகே மற்றும் 27 வயதான ரஜித்த லக்மால் சந்தருவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் - இபரகியில் கடந்த 12 ஆம் திகதி இரவு 11.50 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் 32 வயதான ஒருவர் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து இடம்பெற்ற போது அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற போது இரண்டு வேன்களில் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட 07 பேர் இருந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உயிரிழந்த நிசல் சாருக்க விதானகே வேனை ஓட்டியுள்ளதுடன், விபத்து இடம்பெற்று மூன்று தினங்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ரஜித்த லக்மால் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கையை சேர்ந்த மேலும் இரண்டு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் வாக்குச் சீட்டுகள் உரிய தேதியில் அரசு அச்சகத்தால் விநியோகிக்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வெலிபென்னையில் நபரொருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த குழுவினர் உயிரிழந்த நபரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதசாரிகளுக்கு ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிள்களை அஜாக்கிரதையாக ஓட்ட வேண்டாம் என குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்களை எச்சரித்ததாகவும் அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாததில் ஒரு குழந்தையின் தந்தையான வாலிபர் தாக்கபட்டமயும் ,சந்தேகநபர்கள் பாடசாலை ஒன்றின் தரம் 11 மாணவர்கள் எனவும், அதில் உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் வேலையில்லாமல் இருந்ததாகவும், வேலைக்காக வெளிநாடு செல்வதற்காக காத்திருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி தொடர்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்குள் வைத்து 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்து வருகிறார்.
குறித்த பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று மல்பிட்டிய பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்தி சந்தேக நபரான சிப்பாயை கைது செய்தது.
லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு பருப்பும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 164 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சரிரி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 179 ரூபாவாகும்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.