மின்வெட்டுகளின் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரித்துள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்தார்.
பெரும்பாலான ரயில் கடவைகள் மின்சாரத்தால் இயக்கப்படும் "பெல் மற்றும் லைட்" பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மின் தடையின் போது அந்த ரயில் கேட்கள் பேட்டரியில் இயங்கும். ஆனால் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பேட்டரி திறன் குறைவடைந்துவிடும் , எனவே, பெல் மற்றும் லைட் அமைப்புகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம் எனவும் சாரதிகளையும் பாதசாரிகளையும் கவனமாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுள்ளது .
எனவே மின்வெட்டு ஏற்படும் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக செனவிரத்ன தெரிவித்தார்.
வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, மீண்டும் பதவி ஏற்க தயாராக இல்லை என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்தை ஏப்ரல் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் நீதி அமைச்சராக இருந்து நேற்றையதினம் நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிதி அமைச்சில் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியின் 40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 ஆளும் கட்சி எம்பிக்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேச்சைக் குழுவாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.
இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை ஊடகங்களுக்கு அறிவித்தது.
113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சற்று முன்னர் விலகியுள்ளது.
அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு வழங்கிய இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் சற்று நேரத்திற்கு முன்னர் ராஜினாமா செய்துள்ளார்.
தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது 1000 ரூபா சம்பள விடயம் மற்றும் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.
அதன் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி ஆதரவாளர்களும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தொண்டமான் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியது.
இந்நிலையில் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தெரிய வந்துள்ளது.
நாமல் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த அன்றே துபாய் சென்றுள்ளார் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது மனைவி மகன் உட்பட குடும்பத்தவர்கள் இரண்டாம் திகதி மாலைதீவு சென்றுள்ளனர்.
நாமல்ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அவரது குடும்பத்தினர் துபாயிலிருந்து மேற்குலக நாடொன்றிற்கு செல்வார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது.
நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட பாதுகாப்பு கூட்டமொன்று சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை முன்னெடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு புறம் மக்கள் கொந்தளிப்பு. மறுபுறத்தில் - நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழப்பு என இரு முனை தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான சாதாரண பெரும்பான்மையையும் இன்று இழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடும் என்பதால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு அதி முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
" இந்த அரசு பதவி விலக வேண்டும். மாறாக பதவியை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 50பேர்வரை சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நேற்று தகவல் வெளியிட்டார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சபையில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
அத்துடன், விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை விடுக்கவுள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று 11 கட்சிகளின் கூட்டணியில் இணையக்கூடும் என்பதால் அரசு சாதாரண பெரும்பான்மையை இழப்பது உறுதியென கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
" நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்." - என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை வளைத்போட்டு கூட்டரசு - இடைக்கால அரசு அமைக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. இதற்கிடையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, காபந்து அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனவே, அடுத்துவரும் 48 மணிநேரம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு எவ்வாறு சாதாரண பெரும்பான்மையை இழக்கும் என்பது தொடர்பிலான அட்டவணை இங்கு இணைக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117
ஈபிடிபி - 02
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01
அரவிந்தகுமார் - 01
டயானா - 01 - 122 ஆசனங்களே உள்ளன.
அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க
122 - 7 = 115
ஆக - ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.
115-2 = 113
எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 - 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.
சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு. எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.
நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குசெல்லக்கூடும் . ( தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.) ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது.
பிரதமர் பதவி துறந்தால், அமைச்சரவையும் கலைந்துவிடும். பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம். இது இடைக்கால அரசுக்கான நகர்வாக அமையலாம்.
பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145ஆசனங்களை வென்றது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி - 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02
பிவிதுரு ஹெல உறுமய - 01
கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ - 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.
145 -26 = 119
எமது மக்கள் சக்தி - 01
தேசிய காங்கிரஸ் - 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன.
119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.
புதய இணைப்பு
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி, பிரியங்கர உள்ளிட்டவர்களும் பதவிகளை துறந்துள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எனவே, அரசு சாதாரண பெரும்பான்மையை இன்று இழக்கும் என்றே தெரியவருகின்றது.
ஆர்.சனத்