web log free
July 27, 2024
kumar

kumar

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (05) வானிலை அறிக்கையை வெளியிடும் போதே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.

இன்று நிகழ உள்ள சந்திர கிரகணம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது அந்த நேரத்தில் சந்திரன் பூமியின் நிழலால் மூடப்படும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்காவில் தெரியும். 

சந்திர கிரகணத்தை நீங்கள் நேரடியாக பார்க்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த சந்திரகிரகணத்தை இரவு 10.52 மணிக்கு பார்க்கலாம். அப்போது, சந்திர கிரகணம் பார்ப்பதற்கு இருட்டாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.     

பொதுஜன பெரமுனவைக் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சியாகவே ராஜபக்ச குடும்பம் கட்சியின் தலைவர் பதவியை தம்மரதன தேரருக்கு வழங்கியுள்ளதாக அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் வெறும் தூதுவர் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக செயற்படும் குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா இங்கு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதியாக பசில் ராஜபக்ச தெரிவாகியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாமல் ராஜபக்ஷவை முன்னிலையில் வைத்து மொட்டுவை சேர்ந்த சிலர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. உங்களுக்கு என்ன நடக்கும்? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கம்மன்பில கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு எதுவும் ஆகாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட ராஜபக்சக்கள் அவரது அணியில் இருப்பதே மிகப்பெரும் தடையாக உள்ளது. பசில் ராஜபக்ச இலங்கையில் மிகக் குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதி என ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர் மொட்டு தலைவர். இவ்வாறான பலத்தை தோளில் சுமந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் அழுத்தமாகும். எனவே தமக்கு சுமையாக இருக்கும் ஒரு கூட்டத்தை எப்படி அகற்றுவது என்று ஜனாதிபதி யோசித்துக்கொண்டிருக்கலாம். பசில் ராஜபக்ச குழுவினர் நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளைக் கேட்டு வருகின்றனர். ஜனாதிபதி அவற்றைத் தரவில்லை. காரணம் அவர்களை காட்டிவிடும் நோக்கமாக இருக்கலாம். எவ்வாறாயினும், ராஜபக்சக்களுடன் எமக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை." என்றார். 

கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளை இந்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய அதிபர், பேருந்தில் வீட்டுக்குச் செல்லும் போது தனது பணிப் பையில் மறைத்துக்கொண்டு மாணவிகளின் மார்பு மற்றும் தொடைகளை தொட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிடுகின்றார்.

அங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த எம்.பி., அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

மடுல்சிம பகுதிக்கு வந்து மக்களுடன் தமது கோரிக்கைகளுக்கு அமைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

லண்டனில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.

லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவின் பிரகாரம், ரங்கா நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் அவரை 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இலங்கசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.

இருப்பினும், கார் விபத்து தொடர்பான வழக்குக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீ ரங்கா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ரங்கா சிறைப் பேருந்தில் ஏறும் போது பின்வருமாறு கூறினார்:

“வாயை மூடிக்கொண்டு பொய்யைப் பாதுகாத்துக் கொள்ளவும் எங்களை சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். வழக்குகளுக்குப் பின் வழக்குகள் போடுவது அரசாங்கமே தவிர வேறு யாருமல்ல. பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீட்டிப்பு கிடைக்கும்” என்றார். 

இந்த நாட்களில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நோயின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகள் ஏற்படலாம் என சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட அதே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும், முறையாக  முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்றும் அவர் மேலும் கூறினார்.  

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது.

இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது.

''உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்'' என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத்தை தன்வசப்படுத்தியது.

சர்வதேச ஊடகச் சுட்டியில் 2022 ஆம் ஆண்டு இலங்கை 146 ஆவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, இலங்கையில் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரம் தொடர்பில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.