web log free
April 19, 2026
kumar

kumar

"வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்."

- இவ்வாறு பிரிட்டன் வாழ் இலங்கையர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரிட்டன் வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். 

அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரிட்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது.

பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரிட்டன் வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரிட்டனின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், 

"எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துக்கு உள்ள பிரச்சினைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக்கொள்வார்கள். 

இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றோம்.  

எங்கள் உறவு நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணி என எதுவாக இருந்தாலும் , நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவைத் தொடர்ந்து பேணவே விரும்புகின்றோம்.  

எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். 

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். 

நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும். நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். 

கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால், அதற்குப் பங்களித்தவர்களாக இருப்போம். 

அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும். 

வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயற்படுவதாகும்.

இலங்கையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களைக் கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்துள்ளோம். நாடாளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கின்றோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. 

கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும்.   

கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 

2018ஆம் ஆண்டு அரசமைப்பைத் திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனைத் தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகின்றேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள். 

இங்கு வாழும் சுமார் 5 இலட்சம் இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. 

வெளிவிவகார அமைச்சு அதைச் செயற்படுத்தி வருகின்றது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால், இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும். 

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்" - என்றார்.

ஐக்கிய இராச்சியத்துக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு வருமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அரசியலில் ஈடுபடாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்வதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த பதினைந்து நாட்களாக கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க தினமும் ஏராளமான அரசியல்வாதிகள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் வந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன போன்ற அரசாங்கத் தலைவர்களும் அடங்குவர்.

இதுதவிர உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கூட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பார்க்க அதிக அளவில் வந்துள்ளனர்.

ராஜபக்சேவை சந்திக்க சிலர் குழுக்களாக வந்தமையும் சிறப்பு.

கோட்டாபய ராஜபக்ஷ ஹுனுபிட்டிய கங்காராமவிற்கு வந்து சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி  தனது மனைவியுடன் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொண்டார்.

கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தலைமையிலான மகாசங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் செத்பிரித் ஓதி ஆசீர்வதித்திருந்தனர்.

துறவறம் பூண்ட பக்தர்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் அவர்களில் சிலர் முன்னாள் ஜனாதிபதிக்கு நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நெலும் குளுன வளாகத்திற்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் நெலும் குளுன திட்டத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவும் கலந்துகொண்டார்.

அதன்படி தாமரை கோபுரத்தின் உச்சிக்கு சென்று அவதானித்த முன்னாள் ஜனாதிபதி, சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

காதலனை மகிழ்விப்பதற்காக வீட்டின் சமையலறையில் கஞ்சா செடி வளர்த்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலுக்கு அடையாளமாக ரோஜா செடி வளர்ப்போர் மத்தியில் கஞ்சா செடி வளர்த்து சிக்கியுள்ளது இந்த ஜோடி.

கொச்சியில் உள்ள ஆக்ஸொனியா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக போலீசார் சோதனை நடத்தினர்.

தலையில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த மென்பொறியாளர் ஆலன் (26) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ஒரு அறையில் இருந்து வந்த அவரது காதலி அபர்ணா என்பவர் வீட்டின் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்ப்பதை ஒப்புக் கொண்டார்.

சமையலறையில் ஒரு பகுதியில் சிறிய தொட்டியில் 4 மாதங்களாக வளர்க்கப்பட்ட ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட கஞ்சா செடி யை பார்த்த போலீசார் மென்பொறியாளர் ஆலனையும், அவரது காதலி அபர்னாவையும் (24) பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இணையத்தில் கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்று தேடி பார்த்து கஞ்சா விதையை ஆன் லைனில் வாங்கி பயிர்செய்து கஞ்சா செடியை வளர்த்ததாகவும், அந்த செடிக்கு காற்று சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக குட்டியாக ஒரு மின் விசிறியை மெல்லிய ஸ்பீடில் 24 மணி நேரமும் சுற்ற விட்ட அபர்ணா, சூரிய ஒளிக்கு பதிலாக மிதமான வெப்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்.இ.டி விளக்கு ஒன்றையும் அந்த செடிக்கு மேல் தொங்க விட்டது தெரியவந்தது.

காதலனை மகிழ்விக்கும் வகையில் காதலுக்கு அடையாளமாக அந்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக அவருடன் தங்கி இருந்த காதலி அபர்ணா தெரிவித்தார்.

காதலுக்காக எதை எதையோ கொட்டிக் கொடுத்த ஜோடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடிவளர்த்த கேடி ஜோடியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறித்த குடியிருப்பில் வசித்து வந்த பத்தனம்திட்டாவை சேர்ந்த அமல் என்ற இளைஞனை சாட்சியாக பொலிசார் அழைத்து சென்றனர். அவரை சோதனையிட்டதில், ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞசாவை மீட்டனர்.

“ எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பிளாண்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது பதிலடி தீவிரமாக இருக்கும்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர், தவிசாளர் உறுப்பினர்கள், ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

 " டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர் ஒருவர் 4 கிலோ பச்சைக்கொழுந்து எடுத்தாலே அவர்களின் சம்பளம் ஈடாகிவிடுகின்றது. அதற்கு அப்பால் பறிக்கப்படும் கொழுந்துமூலம் கம்பனிகளே இலாபம் அடைகின்றன. அதாவது நாளொன்றுக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாவரை உழைத்துக்கொடுத்துவிட்டே தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா பெறுகின்றனர்.

மஸ்கெலியா பிளாண்டேசன், எதிர்வரும் 10 , 11 ஆம் திகதிக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாறாக இழுத்தடிப்பு இடம்பெற்றால், பெருந்தோட்டத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும். அரச நிறுவனத்தால் பராமரிக்க முடியவில்லையெனில், தொழிலாளர்களுக்கு காணியை பகிர்ந்தளிக்க வேண்டும்.

சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் போன்ற எமது மறைந்த தலைவர்கள் காங்கிரஸின் உள்ள அனைவருக்கும், தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பயிற்சியளித்துள்ளனர். அவர்கள் காட்டிய வழியில் பயணிக்கின்றோம். எனவே, தொழிலாளர்கள் தளர்ந்துவிடக்கூடாது.

இதைவிட பயங்கரமான போராட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். ஒற்றுமையாக இருங்கள். “ - என்றார்.

இன்று (20) மற்றும் நாளை (21) மின்வெட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அந்த இரண்டு நாட்களிலும் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படும்.

இதன்படி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் இருப்பு இன்மையால் மூடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது.

முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் இருப்பு இல்லையென மிகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தமக்கு தெரியவந்ததாக தெரிவித்த கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முகாமையாளர், பணியாளர்கள் பணிக்கு வந்து பிற்பகலில் வெளியேறும் நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெளியிடப்படவுள்ளதாக பட்டியலிடப்பட்டிருந்த 500 எரிபொருள் கையிருப்புகளில் பாதிக்கும் குறைவான எரிபொருள்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளதாகவும், கொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் தாமதமாகி வருவதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தற்போது மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 22 உள்ளூராட்சி சபைகளை அந்தந்த மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் பிரேரணையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நிர்வாகப் பணியை எளிதாக்குவதற்கு மிகவும் முறையான மற்றும் திறமையான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

அதன்படி, பின்வரும் பிராந்திய சபைகள் தொடர்புடைய மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளுடன் இணைக்கப்படும்.

நுவரெலியா பிராந்திய சபை, மாத்தளை பிராந்திய சபை, தம்புள்ளை பிராந்திய சபை, ஹலவத்த பிராந்திய சபை, புத்தளம் பிராந்திய சபை, குரணாகலை பிராந்திய சபை, குளியாபிட்டிய பிராந்திய சபை, பொலன்னரேவ பிராந்திய சபை, கம்பஹா பிராந்திய சபை, பனங்கொட பிராந்திய சபை, பெக்ராவலை பிராந்திய சபை பிராந்திய சபை, ஹம்பாந்தோட்டை பிரதேச சபை, தங்காலை பிரதேச சபை, பதுளை பிரதேச சபை, பண்டாரவளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச சபை, பலாங்கொடை பிரதேச சபை, கேகாலை பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகர கடவத் பிரதேச சபை ஆகியன இவ்வாறு ஒன்றிணைவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த 22 உள்ளூராட்சி மன்றங்களை இணைக்கும் மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் பட்டியல்  வெளியாகியுள்ளது. 

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது.

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடு ஜிம்பாப்வே, இது 353 சதவீதம்.

லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் ஆகும் .

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராசிபலன் மற்றும் கிரகநிலை மிக பலமானதாக இருப்பதால் 2025 ஆம் ஆண்டு வரையில் அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரபல மூத்த ஜோதிடர் பீ.ஜி.பி. கருணாரத்ன குறிப்பிடுகின்றார்.

யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு நபரோ அல்லது குழுவோ முயற்சித்தால் அது பாரிய இரத்தக்களரியில் முடிவடையும் என கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த மாதம் நாட்டிற்கு மிகவும் சாதகமாக இல்லை என்றும், மீண்டும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

மீண்டும் பொது அமைதியின்மை ஏற்படும் எனவும் அது அரசாங்கத்தையும் அரச தலைவரையும் பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd