web log free
September 19, 2024
kumar

kumar

 

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று (28) மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் சோதனையில் அது உறுதியாகியுள்ளது.

 அதனால் அவர் தற்போது கொழும்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் எடுத்த மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களிலும் ஆடைத்தொழிற்சாலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் போன்ற சமூகத்தின் மிகவும் சுரண்டப்படும் பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்காக அடிமைத்தளையின் நவீன வடிவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையாகும். இச்சிறப்பான முன்னெடுப்பினைத் தெற்காசியாவில் எடுத்த முதலாவது நாடு இலங்கையாகும். பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் இலங்கை உதாரணத்தினைப் பிரதிசெய்ய முடியுமா?

பிரச்சினைகளை ஸ்தலத்தில் கண்டறிவதற்காக ஐ.நா. விசேட தூதுவரான டொமொயா ஒபொகடா நவம்பர் 26 இற்கும் டிசம்பர் 3 இற்கும் இடையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். விஜயம் செய்த தூதுவர் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தித்தார். தான் கண்டறிந்த விடயங்களின் பூர்வாங்க அறிக்கையினைத் தூதுவர் நவம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதி அறிக்கையானது 2022 செப்டெம்பரில் ஐநாவில் சமர்ப்பிக்கப்படும்.

தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். தனிநபர் வருமானம், வாழ்க்கை நிலைமைகள், நீண்ட ஆயுள், கல்வி அடைவுகள் மற்றும் பெண்களின் நிலை – இவற்றைக் கணிப்பிட எந்த அளவுகோலையும் பிரயோகியுங்கள் – அவர்கள் ஏணியின் அடியிலேயே இருக்கின்றனர். ஐ.நா. விசேட தூதுவர் பின்வருமாறு கோடிட்டுக்காட்டியுள்ளார்: “நவீன அடிமை முறைகள் இனத்துவப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 200 வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்களின் வம்சாவளியின் அடிப்படையில் பல்வேறு வடிவிலான பாகுபாடுகளுக்கு இன்னும் முகங்கொடுத்து வருகின்றனர்.”

2017ஆம் ஆண்டில், இலங்கை தேயிலைத் தொழிற்துறையின் 150ஆவது வருடப் பூர்த்தியினைக் கொண்டாடியது. பொருளாதாரத்தில் தேயிலைத் தொழிற்துறையின் வகிபாத்திரத்தினைக் கோடிட்டுக்காட்டுவதற்கும், துறையின் உற்பத்தியினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும், துறையினை எவ்வாறு நவீனமயப்படுத்துவது என்பது பற்றியும் அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் மட்டுமே, உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலைக் களிப்பினை வழங்கும் இரண்டு இலைகளையும் ஒரு கொழுந்தினையும் (கலாநிதி முல்க் ராஜ் ஆனந்தினால் எழுதப்பட்ட நாவல்) உற்பத்திசெய்பவர்கள் பற்றிய ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. தோட்ட உரிமையாளர்களினதும் தொழிலாளர்களினதும் மாறுபடும் வாழ்க்கைகள் கட்டாயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும். கீழேயுள்ள இரண்டு மேற்கோள்கள் மாறுபாட்டினை விபரிக்கின்றன. பிரித்தானியர்கள் எவ்வாறு அடிமைமுறையினை மீளக் கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தொகுப்பினை பிபிசி 2005ஆம் ஆண்டு ஒலிபரப்பியது. தோட்ட உரிமையாளரின் வாழ்வினை ஆவணத்தொகுப்பு பின்வருமாறு சித்தரிக்கின்றது: “நீங்கள் உங்கள் வராந்தாவில் அமர்ந்திருக்க, வேலைக்காரன் விசிறிவீச, லெமனெடைப் பருகிக்கொண்டிருக்க, உங்கள் கால் நகங்களை யாரோ ஒரு கூலி நறுக்கிக்கொண்டிருக்க, நீங்கள் தொழிலாளர்கள் வேலை செய்வதைப் பார்க்கலாம், நீங்கள் விரும்பிய எந்தப் பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம், காலையில் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஏறக்குறைய அனைத்துமே உங்களுக்காகச் செய்யப்படுகின்றன. மக்கள் உங்களைக் கவனித்துக்கொண்டனர், மக்கள் உங்களுக்கு அடிபணிந்தனர், மக்கள் உங்களுக்குப் பயப்படுகின்றனர், தோட்ட உரிமையாளர் என்ற ரீதியில் உங்களின் ஒற்றை வார்த்தை வாழ்வையே மறுக்கலாம்.”

இனப் பிரச்சினைகளின் போது தனது மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளை மலையகத்து இளங்கவிஞரான வண்ணச்சிறகு வெளிப்படுத்துகின்றார். விடியல் என்ற அவரின் கவிதையில் கவிஞர் பின்வருமாறு எழுதுகின்றார்: “எங்கள் இரவுகள் நிச்சயமற்றவை, அன்பே, தூங்குவதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். இதுவே எமது அர்த்தமுள்ள இறுதிக் கணமாக இருக்கலாம். கடைசியாக எம் செல்வங்களின் கன்னங்களில் உன் இதழ்களைப் பதி. ஒரு கனம் நம் உறவுகளை நினைத்துக்கொள்வோம். கடைசியில் எம் விழிநீரைத் துடைத்துக்கொள்வோம்.”

மலையகத் தமிழ் மக்களின் மிக முக்கியமான அம்சம் அவர்களின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள கணிசமான வீழ்ச்சியாகும். 1948 இல் சுதந்திரம் கிடைத்தபோது, அவர்கள் இலங்கைத் தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தனர். கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையில் 1964ஆம் ஆண்டும் 1974ஆம் ஆண்டும் கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையில் இந்தியப் பிரசைகள் என்ற ரீதியில் இம்மக்கள் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்ட காரணத்தினால், இவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது. இன்று, தொகைமதிப்புப் புள்ளிவிபரத்தின் படி, இவர்கள் சனத்தொகையில் வெறும் 5.5% ஆகவே இருக்கின்றனர்.

சுதந்திரத்தின் பின்னரான முதல் சில தசாப்தங்களில் இந்தியத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினை நாடற்றநிலை எனும் பிரச்சினையாகும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் என நடாத்தப்பட்ட சாதுர்யமிக்க கலப்புப் போராட்டங்களுடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் இந்தச் சமுதாயம் பிடிவாதமிக்க சிங்கள ஆதிக்க அரசாங்கத்திடம் இருந்து பிரசாவுரிமைக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 1964 ஒக்டோபர் மாதத்தின் பின்னர் இலங்கையில் பிறந்த அனைவருக்கும் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. இது சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கென எஞ்சியிருந்தவர்களையும் உள்ளடக்கியது. 1978ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார முறைமையினால் இச்சமுதாயம் அதிக பிரதிநிதிகளைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்பக்கூடியதாக இருந்தது.

இப்போது இந்தச் சமுதாயம் சமத்துவத்திற்கும் கௌரவத்திற்காகவும் போராடி வருகின்றது. வாழ்க்கை நிலைமைகள் முன்னேறியிருந்தாலும், செம்மையான சமத்துவம் எனும் அந்தஸ்தினை இம்மக்கள் அனுபவிப்பதற்கு இன்னும் அதிக விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மிகவும் முக்கியமான முதல் விடயமாக, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடப்படவேண்டும். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் ஒருபோதும் தனிநாடொன்றுக்கான கோரிக்கையினை முன்வைக்கவில்லை என்ற போதிலும், 1977, 1981 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இந்தச் சமுதாயத்தினர் சிங்களக் காடையர்களின் வெறித்தனமும் மிருகத்தனமும் கொண்ட தாக்குதலுக்கு உட்பட்டனர். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பிந்துனுவெவ படுகொலையின் பின்னர் நான் ஹட்டனில் இருக்க நேரிட்டது. இந்திரா எனும் ஓர் இளம் பெண் பாதுகாப்பின்மை காரணமாக தன்னால் ஹட்டன் நகரில் நடமாட முடியாதிருப்பதாக என்னிடம் நம்பிக் கூறினார். சென்னையில் பெரம்பூரில் இருக்கும் தனது சகோதரனுடன் தன்னை ஒப்பிட்டு அங்கே தன்னால் பின்னிரவுச் சினிமாக் காட்சிக்குக் கூடப் பயமின்றிச் செல்ல முடியும் எனக் கூறினார். இரண்டாவதாக, தேயிலைத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாவாகும். இது இம்மக்களின் நாளாந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கே போதாது. இதனால் பலரும் தோட்ட வேலைகளுக்குப் போகாமல் மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்யச் செல்கின்றனர். அங்கே இவர்களுக்கு காலையுணவும் மதிய உணவும் வழங்கி இதைவிட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. இறுதியாக, எல்லாச் சிறுவர் சிறுமிகளும் பாடசாலைக்குச் சென்றாலும் பலர் பாடசாலையில் இருந்து இடைவிலகுகின்றனர். மிகவும் சொற்பமானவர்களே பல்கலைக்கழக மட்டம் வரை கல்வி கற்கின்றனர். சர்வதேச உறவுகளுக்கான சார்க் பேராசிரியராக நான் 2006ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றினேன். கலைமானி இறுதியாண்டு வகுப்பில், தமிழ் மொழி மூலத்தில், 10 மாணவர்கள் இருந்தனர். இந்தப் பத்து மாணவர்களில் எட்டுப் பேர் முஸ்லிம் மாணவிகள். இவர்களுடன் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் பெருந்தோட்டப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு மாணவியும் இருந்தனர். அதே வருடம், பல்கலைக்கழகத்தில் இருந்த இந்தியத் தமிழ்ச் சமுதாயத்தினைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 ஆகவே இருந்தது.

இலங்கை உயர் ஸ்தானிகரான மிலிந்த மொரகொட அவரின் மூன்று வருடங்களுக்கான செயற்திட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் அதிகளவு கல்விப் பரிமாற்றங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கோடிட்டுக்காட்டியுள்ளார். உதாரணமாக, உலகளாவிய கற்கைகளுக்கான சென்னை நிலையம், தமிழ் மாணவர்கள், குறிப்பாக மலையக மாணவர்கள் இரண்டாம் நிலைக் கல்விக்காகவும் பல்கலைக்கழகக் கல்விக்காகவும் இந்தியாவுக்கு வருவதற்கு உதவிசெய்து அவர்களின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்குப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கும் ஆர்வமாக இருக்கின்றது. ஒரு சமுதாயத்திடம் சிறந்த விழுமிய அடிப்படையிலான கல்வி இருக்கையில் மாத்திரமே அச்சமுதாயத்தினால் முன்னேற முடியும். இந்த விடயத்தில் தமிழ்நாட்டினால் ஒரு நன்மையளிக்கும் வகிபாத்திரத்தினை வகிக்க முடியும்.

யாழ்ப்பாண வெள்ளாளர்களால் பயன்படுத்தப்பட்ட அவமதிப்புக்குள்ளாக்கும் தோட்டக்காட்டான் என்ற சொற்பதத்தில் இருந்து மலையகத் தமிழர் எனும் உயர்வான இடுபெயருக்கு நிலைமாற்றம் அடைந்தமை மலைநாட்டில் இடம்பெற்றுள்ள பண்புசார்ந்த மாற்றத்தின் ஓர் எடுத்துக்காட்டாகும். இருப்பினும், வாய்ப்புக்களின் சமத்துவத்தினை அனுபவிக்கும் சமமான பிரசைகளாக இவர்கள் மாறுவதற்கு முன்னர் நிறைய விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சந்திக்கும் சிறப்புரிமை கிட்டிய முனைவர் எம்.ஏ.நுஹ்மான் அவர்கள் எழுதிய கவிதையுடன் இதனை நான் நிறைவுசெய்ய விரும்புகின்றேன்: “எங்கே சமத்துவம் இல்லையோ, அங்கே சமாதானம் இல்லை, எங்கே சமாதானம் இல்லையோ, அங்கே சுதந்திரம் இல்லை, இவைதான் எனது இறுதி வார்த்தைகள், சமத்துவம், சமாதானம் மற்றும் சுதந்திரம்.”

வி.சூர்யநாராயணன் (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர், தெற்கு மற்றும் தெற்காசியக் கற்கைகளுக்கான நிலையம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் (ஆசிரியர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நிலையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராவார்)

The plight of Tamils of Indian origin in Sri Lanka என்ற தலைப்பில் ‘த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் 22 டிசம்பர் 2021 திகதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி - மாற்றம்

 

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.

அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்ததை அடுத்து விசார​ணை ஜூன் 10ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த முறைப்பாட்டையடுத்து இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


போலி பாஸ்போர்டில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண் குறித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இலங்கை பெண் லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், விடுதலைப் புலிகளோடு தொடர்பு உடையவர் என்றும், நிதி திரட்டும் பணியில் மேரி முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு, டெல்லி தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் மேரியுடன் தொடர்பில் இருந்த 4 பேரை கைது செய்யும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

நாட்டில் இவ்வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆரூடம் வௌியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் விடயம் குறித்து ஆரூடம் வெளியிட்டார்.

ஆகஸ்ட் மாதம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் எதிர்கட்சியில் அமர்வர் எனவும் அதன்பின் பெரும்பான்மை விருப்பத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் மரிக்கார் கூறியுள்ளார்.

 

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் நடித்த ஆசை மற்றும் பரமசிவன் படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பார்த்து பார்த்து பாராட்டி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தை கடந்த போதும் படத்திற்கான வரவேற்பு இன்னமும் குறையவில்லை.

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியப்போதும் செம ஹிட்டாகியுள்ளது. யூட்யூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை குவித்த அந்த பாடலை தற்போதும் ரசித்து வருகின்றனர். இதனால் ஊ சொல்றியா பாடலின் வியூஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் பாடலில் சமந்தாவின் நடனமும் முக பாவனைகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததும் இந்த பாடலின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகை சமந்தா, மேலும் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பேன் இந்தியா படமாக உருவாகும் லிகர் படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐட்டம் பாடலுக்கு ஆட சமந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி படத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மோசமான உடையில் தனது பின்னழை காண்பித்து போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

 

 

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர், ராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்று நிறுவப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தாம் மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் இலங்கையின் வடமாகாணத்திற்கான தனது எதிர்வரும் விஜயம் ஆகியன நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடி கருத்துகளைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்கள், அடிமட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ராஜதந்திர அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.

நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஆகிய துறைகளில் சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி பாராட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எகிப்தின் தூதுவர் மகேத் மொஸ்லே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதிலும் இலங்கை அடைந்துள்ள அற்புதமான சாதனைகளை சுட்டிக்காட்டியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்கள், இந்த சந்திப்பின் போது பகிரப்பட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

டோகா - கட்டாரில் இலங்கை பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக டோகா செய்திகள் தெரிவிக்கின்றன.

டோகாவில் குடியிருப்பு காவலர் பணியில் ஈடுபட்டு வந்த இலங்கையரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இலங்கையர் குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்படவில்லை.

குடியிருப்புக்கு பெண் ஒருவருடன் வாகனத்தில் வந்த ஆணிடம் அடையாள அட்டையை குறித்த காவலர் கேட்டபோது அதனை வழங்க மறுத்த ஆண் அத்துமீறி உள்ளே செல்ல முயற்சித்துள்ளதார்.

இதனை காவலர் மறித்த போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கை நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டோகா செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட இலங்கை நபர் குறித்த தகவல்களை ஏசியன் மிரர் தமிழ் இணையத்தில் எதிர்பாருங்கள்...